Thursday, January 28, 2010

எதிரும் புதிரும்


குடும்பக் கட்டுப்பாடு செய்து கொண்டால் சாமி குத்தமாகிவிடும் என்பதை நிஜமாகவோ அல்லது வசதிக்காகவோ நம்பி நான்கு பெண் குழந்தைகளையும், ஒரு ஆண்குழந்தையையும் என மொத்தமாக 7 குழந்தைகளை (2 பிறந்து இறந்து விட்டது) பெற்றெடுத்தவர்தான் கிரேட் ராமசாமி. தொழில் விவசாயம். ஆடு, மாடு, கோழி, பூனை, நாய் என ஒரு குட்டி விலங்குகள் சரணாலயமே வைத்து பராமரித்து வருகிறார். இந்தியாவில் மகாத்மா காந்திக்கு போட்டியாக சட்டை போடாத இன்னொரு மனிதர். சூரிய உதயத்தை ஒரு நாள் கூட பார்க்கத் தவறியதில்லை. கடின உழைப்பாளி.
அந்தக் கிராமத்தை பற்றி சொல்ல வேண்டும். முதல் முறையாக ஹெலிகாப்டர் அந்த கிராமத்து வழியாக பறந்து சென்ற போது ஏதோ குண்டு போட வந்து விட்டார்கள் என்று நினைத்துக் கொண்டு சுரைக்கொடிக்குள் ஓடிச் சென்று ஒளிந்து கொண்ட மக்களைக் கொண்டது அந்த கிராமம். அவர்கள் ஊரில் உள்ள ஒரே ரேடியோவில் போர்ச் செய்திகளைக் கேட்டு கேட்டு ஏற்பட்ட பதற்றத்தில் இது போன்ற செயல்கள் எல்லாம் அவ்வப்பொழுது நடைபெறும். அந்த ஊரிலேயே முதல் முறையாக பேருந்தை பார்த்தவர் ராமசாமிதான். அவர்தான் அடிக்கடி தான் வளர்க்கும் ஆடுகளை மொத்தமாக ஓட்டிச் சென்று பக்கத்து டவுனில் நடைபெறும் பிரமாண்ட சந்தையில் விற்று வருவார். அந்தக் கிராமத்துக்கு அவர்தான் உலகம் சுற்றும் வாலிபன்.
அன்று ஒரு நாள், அவர் ஆடுகளை விற்றுவிட்டு ஊருக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். அரசாங்கம் முதன் முறையாக அந்தக் கிராமத்தில் பேருந்தை வெள்ளோட்டம் விட்டிருந்தது. தூரமாக ஏதோ புழுதியைக் கிளப்பிக் கொண்டு வருவதை பார்த்த ராமசாமிக்கு பதற்றம் தொற்றிக் கொண்டது. ஓடிச் சென்று அருகிலிருந்த புளிய மரத்தில் ஏறிக் கொண்டார். அது அருகில் வரவர அவரால் பிரமிப்பை அடக்க முடியவில்லை. இவ்வளவு பிரமாணடமாக ஒரு இயந்திரம் ஊர்ந்து வருவதைப் பார்க்கும் பொழுது அவருக்கு தலையை சுற்றிக் கொண்டு வந்தது. இறுக்கமாக கிளையை பற்றிக் கொணடார். கண்களை கசக்கிக் கொண்டார். தைரியமாக இறங்கி ஓடிச் சென்று ஒரு கல்லை எடுத்து எறிந்து விடலாமா? என்று கூட நினைத்தார்.
அதற்கடுத்த ஒரு வாரத்தில் அவர் அளந்து விட்ட கதைகள் ஹிந்து நாளிதழ் அலுவலகம் வரை சென்று விட்டது. ஹிந்து பேப்பரில் இப்படியொரு செய்தி வெளியானது. இந்தியாவின் வளர்ச்சியடையாத கிராமம் ஒன்றில். வெளிகிரகத்தைச் சேர்ந்த பறக்கும் தட்டு ஒன்று இறங்கியிருக்கிறது. அவர்கள் செல்லும் பொழுது மேய்ந்து கொண்டிருந்த 2 மாடுகளையும், ஒரு கோழி மற்றும் நாய் ஒன்றையும் எடுத்துச் சென்று விட்டார்கள். மேலும் அதை ஓட்டி வந்தவர்கள் பார்க்கவே கொடூரமாக இருந்தார்கள்.
ஆங்கில எழுத்துக்களுக்கு நடுவே கருப்பு வெள்ளை புகைப்படத்தில், கறைபற்கள் தெரிய சிரித்தபடி ராமசாமி போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். இந்த கிராமத்தில் உள்ள மிகச் சிறந்த கதை சொல்லிகளில் ராசாமியும் ஒருவர். விட்டால் ஹாலிவுட் படங்களுக்கே அறிவியல் புனைக் கதைகளை எல்லாம் கூறுவார். ஆனால் அதை புரிந்து கொள்ளக் கூடிய அளவிற்கு அமெரிக்கர்களுக்கு அறிவு பத்தாது என்பது தான் நடைமுறை உண்மை.
வெளிக்கிரகத்து மனிதர்களைப் பார்த்த தீட்டிலிருந்து தன்னை தற்காத்துக் கொள்ள ஐந்தாறுமுறை தனக்குத்தானே மந்திரித்துக் கொண்டார். ஏற்கனவே தொங்க விடப்பட்டிருந்த பல்வேறு தாயத்துக்களுக்கு நடுவே மேலும் சில தாயத்துக்களின் எண்ணிக்கையைக் கூட்டிக் கொண்டார். ஊரில் நடைபெற்ற திருவிழாவின் போது அவருக்கு சிறப்பு படையல் படைக்கப்பட்டது. அப்பொழுது அவருக்கு சாமி வந்து ஆடியதில் இரண்டு ஆடுகளை கழுத்தை கடித்து ரத்தம் குடித்து விட்டார். அதன் பின் அவர் ஊர்க் கோவிலின் சிறப்புப் பூசாரியாகிவிட்டார்.
அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகளுக்கு மத்தியில் கூட அவர் பெயர் அடிபட்டது. ஆனால் ராமசாமி ஊரில் என்ன செய்து கொண்டிருந்தார் தெரியுமா? அரசாங்கம் விவசாயிகள் மேல் அக்கறை கொண்டு அந்த கிராமத்தில் முதல் முறையாக டிராக்டரை அறிமுகப்படுத்தியது. அப்பொழுது கூட அவர் உண்மையை சொல்லவில்லை. தான் பார்த்தது இது போன்றதொரு இயந்திரம் தான் என்று. அந்த டிராக்டர் அவ்வளவு எளிதாக நிலத்தை உழுத அழகு அவருக்கு ஏன் பிடிக்கவில்லை எனத் தெரியவில்லை. திடீரென அவர் மேல் ஆத்தா இறங்கிவிட்டாள். நல்ல வேளை அந்த அரசாங்க ஊழியருக்கும் டிராக்டருக்கும் பெரிதாக சேதம் எதுவும் ஏற்படவில்லை. ஊரிலிருந்து 15 கிலோமீட்டர் தள்ளிச் சென்று விடப்பட்டார்கள்.
இவ்வளவையும் தெரிந்து கொண்ட பின்னரும், ஒரு தற்கொலைப்படை ஊருக்குள் வந்தது. நமது ஊர் குடும்பக் கட்டுப்பாடு அதிகாரிகளுக்கு மிகச்சிறந்த தைரியசாலிகளுக்கான விருதுகளை கொடுத்து கவுரவிக்க வேண்டும் என்பது என் தாழ்மையான கருத்து. உண்மையில் அவர்களின் அசாதாரணமான பணியின் காரணமாகத்தான் இந்தியா இந்த அளவிற்காவது பிழைத்திருக்கிறது. ராமசாமி போன்ற மனிதர்களுக்கு சாராயத்தை ஊற்றிக் கொடுத்து ஏமாற்றி குடும்பக் கட்டுப்பாடு செய்யவில்லை என்றால் என்னாவது இந்தியா. ராமசாமி தனக்கு நடத்தப்பட்ட கு.க. வை உணர்ந்து தெளிந்த போது, அந்த அதிகாரிகள் ஊரை காலி செய்து 2 நாட்கள் ஆகியிருந்தது. வருந்திதான் என்ன பிரயோஜனம். இல்லை ஆத்தாவுக்கு கோபம் வந்துதான் என்ன நடக்கப்போகிறது. முடிந்தது முடிந்ததுதான்.
ஆனால் ராமசாமி தன் கிராமத்தையும், கிராம மக்களையும் உயிரினும் மேலாக நேசித்தார். ஆண்டவன் புண்ணியத்தில் அந்த கிராமம் அதுவரை பஞ்சத்தில் மாட்டிக் கொண்டது கிடையாது. ஆனால் அந்த வருடம் அதாவது கு.க அதிகாரிகள் வந்து சென்றபின், கடுமையான வறட்சிக்குட்பட்டது அந்த கிராமம். ஆத்தா வந்திறங்குவதற்கு சரியான சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது அந்த வறட்சி, ஆனால் ஒவ்வொரு முறை ஆத்தா இறங்கும் பொழுதும் வெளியிலிருந்து ஊருக்குள் வரும் ஆசாமிகளுக்குத்தான் கட்டுப்பாடுகளை விதித்தாளே ஒழிய உள்ளூர் கிராமவாசிகளை நன்றாகப் பார்த்துக் கொண்டாள்.
சென்ற முறை ஆத்தா இவ்வாறு தீர்ப்பளித்திருந்தாள். ஊர் கண்மாயை நம்பியிருந்த விவசாய நிலங்களுக்கு எல்லாம் கிணறு வைத்திருப்பவர்கள் நீர்பாசன உதவி அளித்திட வேண்டும் என்று. ராமசாமியிடம் இரண்டு கிணறு இருந்தது. அவர் ஆத்தாவின் ஜட்ஜ்மெண்டை மீறாமல் தனது கிணறுகளிலிருந்து ஏழை விவசாயிகளின் நிலங்களுக்கு நீர்பாசன வசதி செய்து கொடுத்தார். அதன் பிறகு கிராமம் முழுவதும் அதுபோல செயல்பட்டது. ஐந்தாவது படித்துக் கொண்டிருந்த ராமசாமியின் மகன் முத்துக் குமார், இந்த வருடம் மேல் வகுப்பு செல்ல இருக்கிறான். அருகில் இருக்கும் டவுனுக்குத்தான் செல்ல வேண்டும். சைக்கிள் வாங்கித் தந்தால்தான் பள்ளிக்கூடம் போவேன் என்று அடம் பிடிக்க ஆரம்பித்துவிட்டான்.
அடுத்த முறை ஆத்தா இறங்கிய பொழுது 5ம் வகுப்பு வரை உள்ள ஊர்ப் பொதுப்பள்ளிக்கூடம், மேல்நிலைப் பள்ளியாக மாற ஆவன செய்தாள். அதனால் ஊர்க் குழந்தைகள் அனைவரும் 15 கிலோமீட்டர் டவுனுக்கு செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஆத்தா (ராமசாமி) ரசாயன உரங்களை ஊருக்குள் அனுமதிக்காத காரணத்தால் இன்றும் அந்த கிராமம் நல்ல விளைச்சலைக் கொடுத்துக் கொண்டிருந்தது. இயற்கை வளத்தோடு அழகாகத் தெரிந்த அந்த கிராமம் இன்றும் அறிவியல் உலகத்தால் அவ்வளவாக கெட்டுப் போகாமல் பொலிவுடன் திகழ்ந்து கொணடிருந்தது.
நேரம் பார்ப்பதற்கு சூரியனை மட்டுமே பயன்படுத்தி வந்த ராமசாமி வீட்டில் வைக்க அழகாக இருக்குமே என நினைத்து சென்ற முறை டவுனுக்குச் சென்றிருந்த போது ஒரு கடிகாரத்தை வாங்கி வந்திருந்தார். அந்த கடிகாரத்தை பாத்திரம் கழுவும் பொழுது பாத்திரத்தோடு பாத்திரமாக நீருக்குள் ஊற வைத்து கழுவிய பார்வதி (ராமசாமியின் தர்மபத்தினி) அம்மாளுக்கு, அந்த கடிகாரம் நின்று போனது ஒன்றுமே தெரியவில்லை. அதை அழகாக துடைத்து சாமியறையில் பிள்ளையார் படத்துக்கு அருகில் வைத்து விட்டார். அதன் தலையில் ஒரு குங்குமப் பொட்டு வேறு. தெரிந்து கொள்ள வேண்டிய ஒரு சிறு விஷயம் அந்த வீட்டில் யாருக்கும் மணி பார்க்கத் தெரியாது என்பது. கடிகாரத்தின் உபயோகம் பற்றியும் எதுவும் தெரியாது. அதை ஏதோ அழகுப் பொருள் என்று நினைத்து விட்டார்கள்.
7ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த முத்துக்குமாருக்கு அவனுடைய ஆசிரியர் மட்டும் 10 நாட்களாக சிரமப்பட்டு, வேதனைப்பட்டு மணிபார்க்க சொல்லிக் கொடுக்காமல் விட்டிருந்தால், கடிகாரத்தைப் பற்றி அறிந்து கொள்ளாமலே போயிருக்கும் அந்த குடும்பம். ஒரு வேகத்தில் அந்த கடிகாரத்தைப் பிரித்து வேலை பார்க்க ஆரம்பித்தான் முத்து. கடின முயற்சிக்குப் பின் அந்த கடிகாரம் யார் முயற்சி செய்தாலும் இனி சரி செய்ய முடியாது என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டது. பின் மீண்டும் அழகுப் பொருளாக மாறிப் போனது அது. என்ன நடந்தது என வீட்டில் யாருக்குமே தெரியவில்லை. அது நேற்றைப் போலவே இன்றும் ஒரு அழகுப் பொருளாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது சாமியறையில்.
8 ம் வகுப்பு : ஊரிலிருந்த ஒரே ரேடியோ ரிப்பேராகிப் போனது. முத்துவுக்கோ வெகுநாட்களாக ரேடியோவை பிரித்து பார்க்க வேண்டும் என்கிற ஆசை, அந்த ரேடியோவில் செய்தி கேட்டபடி வரக்காப்பி குடித்தால்தான் காலைக் கடன்களை சிரமமின்றி கழிக்க முடியும் அந்த ஊர் பெருசுகளுக்கு. என்ன செய்வது. சில நிமிடங்களில் பஞ்சாயத்தைக் கூட்டிவிட்டார்கள். முத்து நேரம் பார்த்து தன் கோரிக்கையை பஞ்சாயத்தாரிடம் முன் வைத்தான். நீண்ட விவாதத்திற்கு பிறகு அவனது கோரிக்கை பரிசீலிக்கப்பட்டு ஏற்றுக் கொள்ளப்பட்டது. அந்த ரேடியோவை பிரித்து வெகு நேரமாக பார்த்து கொண்டிருந்தான் முத்து. ரேடியோவுக்குள் ஒவ்வொரு பாகங்களையும் ஆசையாகத் தொட்டுப் பார்த்தான். நன்றாகத் தடவிக் கொடுத்தான். வெகு நாள் ஆசை அது. பின் ஏதோதோ செய்துவிட்டு அதை பயைபடி ஒன்று சேர்த்து மாட்டினான். அனைவரும் ஆவலோடு சுற்றி நின்று வேடிக்கை பார்க்க அந்த ரேடியோ ஆன் செய்யப்பட்டது. ஆனால் அந்த ரேடியோவுக்குள் இருந்து ஏன் வெண்புகை வெளிவருகிறது என்றுதான் யாருக்கும் புரியவில்லை. வெடி விபத்துக்கள் குறித்து சற்றும் அனுபவமில்லாதவர்கள் மட்டுமே அந்த ரேடியோவை சுற்றி அமர்ந்திருந்தார்கள். ஆனால் முத்து எழுந்து நாலுகால் பாய்ச்சலில் ஓடிவிட்டான்.
9 ம் வகுப்பு: ஏன் வெளிநாட்டில் மட்டும்தான் விஞ்ஞானிகள் தோன்ற வேண்டுமா? இந்தியாவில் பிறப்பவர்களுக்கெல்லாம் 6 வது அறிவு இல்லையா என்ன? நானும் எடிசனைப் போல ஒரு விஞ்ஞானியாக வரவேண்டும் என்கிற லட்சிய வெறியை மனதிற்குள் ஆழமாக விதைத்து விட்டான் முத்து. அது வேர் விட்டு வளர்ந்து இன்று ஒரு மரமாக காட்சியளித்தது. ஊர் பண்னையார் ஆள் வைத்து தேடிக் கொண்டிருந்தார் முத்துவை. காரணம் அவரது தோட்டத்தின் கிணற்றடியில் இருந்த மோட்டாரில் நேற்று நண்பகல் 12:25 அளவில் தீபாவளி பட்டாசு வெடித்தது போன்ற ஒரு வெடிவிபத்து ஏற்பட்டதாம். அதை சரி செய்ய வேண்டுமாம். ஆடு தானாக வந்து தலையைக் கொடுக்கும் போது விடுவானேன். ஆனால் ஒரு பின்குறிப்பை மட்டும் தெரிந்து கொள்வது சிரமமில்லாமல் இருக்கும். இரண்டு நாட்களுக்குப் பின் எவ்வளவுதான் பேரம் பசினாலும் 600 ரூபாய்க்கு மேல் தர முடியாது என்று கூறிவிட்டான் அந்த பழைய இரும்புக் கடைக்காரன். அவன் கூறுகிறான். இந்த அடி குழாய்க்கெல்லாம் 600 ருபாய்க்கு மேல் கொடுக்க முடியாது என்று. அதை நீர் இறைக்கும் கம்ப்ரசர் மோட்டார் என்று கூறினால் அவன் நம்பவா போகிறான்?. வெகு சிரமமான அனுபவங்களுக்குப் பின் முத்துக் குமார் கற்றுக் கொண்ட மிக முக்கியமான பாடம், ஒரு சரிசெய்யப்பட்ட பொருள் எப்பொழுது வேண்டுமானாலும் வெடிக்கலாம், மறந்து போய் கூட அருகில் நி;ன்றுவிடக்கூடாது என்பதுதான்.
10ம் வகுப்பு: பண்ணையார் சமீபத்தில் வாங்கியிருந்த ராஜ்தூத் பைக் முத்துவின் கண்களை உறுத்த ஆரம்பித்து விட்டது. அவன் வெகுநாட்களாக எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். அந்த வண்டி ஏதாவது ஒரு இடத்தில் முட்டிக் கொண்டு நின்று விடாதா என்று. அதற்காக அவன் வெகுநாட்கள் காத்திருக்க வேண்டிருந்தது. அது.... அந்த நாளுக்கு காரணமானவள், ஊரில் தயிர் விற்பவள்தான். அவளை பார்த்துக் கொண்டே வண்டியை கண்மாய்க்குள் விட்டுவிட்டார் பண்ணையார். இன்ஜினுக்குள் நீர் ஏறி வண்டி உருட்டிக் கொண்டு வரப்பட்டது முத்துவிடம். நம்பினார் கைவிடப்படுவதில்லை என்பது தான் எவ்வளவு உண்மையான வார்த்தை. அந்த ஊரில் மெக்கானிக் என்ற சிறப்புப் பெயர் வேறு தானாகவே உண்டாகிவிட்டது முத்துவுக்கு. எத்தனை தோல்விகள் வந்தால்தான் என்ன? ஈடுபாடுதான் முக்கியம். மேலும் ஆர்வத்தை அடக்க முடியாமல் கைகள் நடுங்கும் போழுது அந்த வேதனை உரியவர்களுக்குத்தான் புரியும். எத்தனை நாட்கள் தவிக்க வைத்து விட்டது இந்த பைக். இன்று ஒரு கை பார்த்து விடுவது என்று செயலில் இறங்கிவிட்டான். வண்டியை வெயிலில் நிற்க வைத்து வெகு நேரமாக வேலை பார்த்து கொண்டிருந்தான். ஊரே கூடிவிட்டது. பண்ணையாரோ டவுனுக்கு ஆள் அனுப்பி பழைய இரும்புக் கடைக்காரனிடம் விலை விசாரித்து வரச் சொல்லிவிட்டார். வெயில் மங்கும் நேரத்தில் அந்த விபத்து நேர்ந்தே விட்டது. அந்த வண்டி ஸ்டார்ட் ஆகிவிட்டது. சுற்றி நின்றிருந்த ஊர் மக்கள் அனைவரும் கைதட்டி ஆர்ப்பரித்தார்கள். அந்த ஆர்ப்பரிப்பு எந்த அளவுக்கு இருந்தது என்றால் “நம்ம ஊர் எம்.எல்.ஏ முத்து வாழ்க” என்று உணர்ச்சி வேகத்தில் ஒருவன் கூவும் அளவுக்கு. நம்ம ஊர் மக்களிடம் தான் அரிசிச் சோறும், கட்சி ஓட்டும் ரத்தத்தில் ஊறிய விஷயம் ஆயிற்றே.
பண்ணையார் பெருமை பொங்க பார்த்தார். தனது கழுத்திலிருந்த சங்கிலியை (கல்யாணி கவரிங்) கழற்றி ஆனந்த கண்ணீர் பொங்க முத்துவின் கழுத்தில் அணிவித்தார். ஊர் மக்கள் அனைவரும் வியந்து போனார்கள். அப்பொழுது ஒரு குரல் “அடுத்த எம்.எல்.ஏ. பண்ணையார் வாழ்க” 5 வருடமானால் என்ன? இல்லை 5 நிமிடங்கள் என்றால் தான் என்ன? இங்கு எம்.எல்.ஏ. பிச்சை எளிதாக கிடைத்துவிடும்.
மேற்படிப்பு: ஊரில் நடைபெற்ற முக்கியமான விஷயங்ளையெல்லாம் ஞாபகார்த்தமாக இருக்கட்டுமே என்று ஒரு கல்வெட்டு செதுக்குவார்களேயானால், அதில், முத்து மேற்படிப்பு படிக்க (ஐ.டி.ஐ) டவுனுக்கு சென்ற விஷயம் இடம்பெறும், பண்னையார் மகனைத்தவிர அந்த ஊரில் யாரும் அதிகமாக படித்ததில்லை.அவர் சில வருடங்களுக்கு முன்னர்தான் 9ம் வகுப்பை பாதியில் விட்டிருந்தார். பின் அரசியலில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார். அந்த ஐ.டி.ஐ. படிப்பை 2 வருடங்களில் முடிப்பதற்குள் தனது ஏழு அறிவையும் பயன்படுத்தி படாதபாடு படுத்திவிட்டான் முத்து.
என்னதான் கிறுக்குத்தனமாக பல காரியங்களை செய்தாலும் அவன் நிறைய கற்றுக் கொண்டான். தான் கற்றுக் கொண்டதை நடைமுறைப்படுத்துவதில் அதிக ஆர்வம் காட்டினான். மனித உழைப்போடு நவீன இயந்திரங்களையும் கிராம வளர்ச்சிக்கு பயன்படுத்த வேண்டும் என்று விரும்பினான். ராமசாமியோ அடங்கிப் போனார். முன்னைப் போல் அவரால் தீவிரமாக செயல்பட முடியவில்லை. ஊரில் போலியோ சொட்டுமருந்து கொடுக்காமல் ஊனமாகிப் போன குழந்தைகளுக்கு மந்திரித்துவிட்டு தாயத்து கொடுத்துக் கொண்டிருந்தார்.
ஊருக்குள் முதன் முறையாக ட்ராக்டரை கொண்டு வந்து உழ ஆரம்பித்தவன் முத்துதான். அரசாங்கமும், பண்னையாரும் அவனுக்கு நிதி உதவி செய்தார்கள். நீர் பாசனத்திலிருக்கும் பல்வேறு நவீன முறைகளையும் கிராமத்துக்குள் கொண்டுவந்தான். அரசாங்கத்துக்கு எழுதிப் போட்டு ஊருக்குப் பொதுத் தொலைக்காட்சி பெட்டியை வரவழைத்தான். ஊர் மக்கள் வயலும் வாழ்வும் தவிர அனைத்து நிகழ்ச்சிகளையும் பார்த்தார்கள். முக்கியமாக ஒளியும் ஒலியும், சென்றமுறை இப்படித்தான் வெள்ளிக் கிழமை இரவு ஊருக்குள் தீ விபத்து ஏற்பட்டுவிட்டது. ஒளியும் ஒலியும் பார்த்து முடித்துவிட்டுத்தான் சென்றார்கள் மக்கள் தீயை அணைக்க.ராமசாமி இதையெல்லாம் எப்படி அனுமதித்தார் என்று ஆச்சரியமாக இருக்கிறதா? அவர் கடைசியாக சாமி வந்து ஆடிய போது மயங்கி விழுந்துவிட்டார். மருத்துவரிடம் அழைத்து சென்றபின்தான் தெரிந்தது. ரத்தக் கொதிப்பு கன்னாபின்னாவென உயர்ந்திருப்பது. இனிமேல் சாமியாடினால் நேரா சாமிகிட்ட போயிட வேண்டியது தான் என மருத்துவர் எச்சரித்தார். ராமசாமிக்கு என்ன உயிர் மேல் ஆசையில்லையா என்ன?
பல்வேறு நவீன பட்டபடிப்புகளையெல்லாம் பயின்றுவிட்டு வெளிநாட்டுக்கு சென்றுவிடும் இளைஞர்களுக்கு மத்தியில், சுமாரான படிப்பைதான் படித்திருந்தான் என்றாலும், முத்துவால் அந்த கிராமம் அடைந்திருக்கும் பலன் அதிகம். இவன் பத்தாம் பசலித்தனமானவன், வெகுளியானவன், பொழைக்கத் தெரியாதவன், அறியாமை நிறைந்தவன் என எப்படி அடைமொழி போட்டுக் கூறினாலும் அதற்குத் தகுதியானவன்தான். ஆனால் இவனைப் போன்றவர்களுக்கும், இது போன்ற கிராமங்களும், இந்த நாடும் கடமைப்பட்டிருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
கட்டாயத்தின் பேரில் நாட்டுக்குச் சேவை என்பதோ, அல்லது கருத்துத் திணிப்பின் மூலமாகவோ? ஒரு படித்த இளைஞனை தடுத்து நிறுத்திவிட முடியாது. வெகுளித்தனமான அன்போடு கூடிய ஆர்வமான கல்வியால் மட்டுமே இளைஞர்களை இந்தியாவை நோக்கி திசை திருப்ப முடியும். முத்துவின் மகிழ்ச்சியையும், அவனால் அந்த கிராமம் அடைந்த வளர்ச்சியையும், அமெரி;க்காவின் ஒரு தொழில் நுட்ப வல்லுனராலும் அடைந்து விட முடியாது.ராமசாமியும், முத்துவும் முரண்பட்ட இருதுருவங்கள் தான் இருப்பினும் அவர்கள் அடிமனதில் உள்ள நல்ல விஷயம் கிராமத்தின் நலன் மட்டுமே. அவர்கள் எவ்வளவுதான் கிறுக்குத்தனங்கள் செய்தாலும் அவையெல்லாம் கிராமத்திற்கு நன்மையைத்தான் வழங்கின. சுயநலமற்ற நல்ல மனம் என்ற ஒன்று மட்டும் இருந்து விட்டால்போதும். நடப்பவையெல்லாம் நன்மையாகத்தான் முடியும்.
நன்றி கீற்று, திண்ணை

எனக்குப்பின்தான் நீ


அந்த நகைச்சுவை பற்றி ஆழமான விசாரணை நடத்தியே ஆக வேண்டும். அவள் இப்படி கூறியிருந்தாள்.


‘சாவதாய் இருந்தால் நான் தான் முதலில், எனக்குப்பின் தான் நீ”

1

சாவதாய் இருந்தால் நான் தான் முதலில்என்னை பரிதாபமாக கெஞ்சவிட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான் என் நண்பன். அவன் கொடுக்கமாட்டான் என்று தெரிந்துதான் அவனிடம் இதை நான் கேட்டுக் கொண்டிருந்தேன். அவன் சிரித்துக் கொண்டே மறுத்துக் கொண்டிருந்தான். அது எனக்குப் பிடிக்கவில்லை. அவனிடம் எனது குரலை கடுமையாக்கிக் கொண்டு கேட்க ஆரம்பித்தேன். அவன் அப்பொழுதும் மறுத்தான். எனக்கு உண்மையிலேயே கோபம் வந்துவிட்டது. உண்மையில் சட்டையை பிடிக்காத குறை. அவனிடம் மிகக் கடுமையாக நடந்து கொண்டேன். அவன் சற்று மனம் வெதும்பி போனான். அதன் பின் விளைவுகளைப் பறறி உனக்குத் தெரியுமா என்று வினவினான். எனக்கு அவன் பேச்சை வளர்த்துக் கொண்டே போவது சற்றும் பிடிக்கவில்லை. கோபத்தில் எனக்கு மூச்சு வாங்கியது. பின் என் இருப்பை அவன் புரிந்து கொண்டானோ என்னவோ கொடுத்து விட்டான். நான் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. அவனிடம் இருந்தது அவ்வளவுதானாம்.


அவன் கொடுத்தது - 6 தூக்க மாத்திரைகள்அவன் பெயர் - சரவணன்தொழில் - மெடிக்கல் ரெப்இன்னும் 30 மாத்திரைகளுக்கு என்ன செய்வது என்றுதான் அப்பொழுது புரியவில்லை.


2


அவ்வளவு தெளிவாக கேட்கவில்லையென்றாலும் என் சுயநினைவு தப்புவதற்கு சில கணங்களுக்கு முன் கேட்ட சில வார்த்தைகளை கோர்வைப்படுத்தி கூறிவிடுகிறேன்.


கடவுளே அதை நான் எப்படிக் கூறுவேன், அவர்......... அவர் என் தந்தை, அவர் சென்டிமென்டாக என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். அது ஒரு நல்ல காமெடி, சுயநினைவு தப்புவதற்கு முன் என்னை சிரிக்க வைத்து விட்டார். அது..... அந்த வார்த்தைகள், ‘சாவதாய் இருந்தால் எல்லோருக்கும் தூக்க மாத்திரைகளை வாங்கிக் கொடு, எல்லோரும் சேர்ந்து சாகலாம்”


நான் என்ன செய்வது சிரிப்பதைத் தவிர. அவர் அப்படி பேசி நான் கேட்டதே இல்லை. 30 மாத்திரைகளை சேர்ப்பதற்குத்தான் நான் எவ்வளவு கஷ்டப்பட்டேன், ஒவ்வொரு மெடிக்கல் ஷாப்பிலும் ௨ மாத்திரைகளுக்கு மேல் கேட்டால் சந்தேகமாகப் பார்க்கிறார்கள்.


அந்த டாக்டர் என் வயிற்றிலிருந்து மாத்திரைகளை எடுக்கும் முயற்சியில் நான் இன்னொரு முறை செத்துப் போனோன்.


ஐ.சி.யு. வில் இருந்த 3 நாட்களும் இந்த வார்த்தைகள் தான் திரும்ப திரும்ப ஞாபகம் வந்து கொண்டிருந்தது.


‘சாவதாய் இருந்தால் நான் தான் முதலில், எனக்குப் பின்தான்


நீ”நான் மருத்துவமனையில் நிர்வாணமாய் இருந்த சமயத்தில், அவள் இன்னொருவனுடன் முதலிரவில் நிர்வாணமாய் இருந்திருக்கிறாள். என் மனம் விரும்பவதெல்லாம் இக்கதையின் தலைப்பை அவளுடைய கண்ணோட்டத்தில் நிஜமாக்க வேண்டும் என்பது தான்.
நன்றி கீற்று

பழிக்குப் பழி

நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவித்த அந்த 3 கொடூரர்களுக்கு உலகின் மிகச் சிரமமான தண்டனை வழங்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு அது முடியும் என்று தோன்றவில்லை. வெகு சிரமமான அந்தகாரியத்தில் கடந்த ஒரு மணி நேரமாக கட்டாயத்தின் பேரில் ஈடுபட்டிருந்தார்கள். கடவுள் என்று ஒருவர் இருப்பாரேயானால், அவரும் துரதிஷ்டவசமாக நேர்மையானவராக இருப்பாரேயானால் நிச்சயமாக எதிர்காலத்தில் பழி வாங்குவதற்கு ஒரு வாய்ப்பையாவது அளிக்க வேண்டும். கண்ணுக்கு தெரியாத சூட்சமமான வேதனை ஆக்கிரமித்து அழுத்திக் கொண்டிருக்கிறது வெகு நேரமாக. இது மிகப்பெரிய அவமானமும் கூட. இதற்கெல்லாம் ஒரு விடிவு காலம் நிச்சயமாக வரும்.

ஆனால் இந்த சமயத்தில் யாருக்கும் தெரியாமல் நாங்கள் அந்த தண்டனையை மீறிக் கொண்டுதானிருந்தோம். வாயில் விரல் வைத்தபடி நாங்கள் மூவரும் உதடுகளை கூட அசைக்காமல் பேசிக் கொண்டுதானிருந்தோம். அந்த மட ஆசிரியர் நினைத்துக் கொண்டிருக்கிறார். வாயில் வரலை வைத்துக் கொண்டு அமைதியாக மண்டியிட்டிருக்க வேண்டும் என்று கூறிவிட்டால். நாங்கள் அமைதியாக இருந்து விடுவோம் என்று. அவருக்கு எங்கே தெரியப் போகிறது நாங்கள் புதிதாக கண்டுபிடித்திருக்கும் இந்த தொழில் நுட்ப யுக்தி பற்றி. எங்கள் உதடுகள் அசையாது. எங்கள் நாக்கு கூட அசையாது, உதடுகளின் குறுக்கே விரலை வைத்திருப்போம். ஆனால் வார்த்தைகள் வந்து கொண்டுதானிருக்கும், செய்திகள் பரிமாறப்பட்டுக் கொண்டுதான் இருக்கும். இருப்பினும் அவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ள வேண்டியது எங்கள் கடமை.

கடந்த ஒரு நாளில் நிகழ்ந்த பல விஷயங்களை இங்கே சொல்லியாக வேண்டும். இல்லையெனில் எங்களது ரிவன்சின் நியாயம் புரியாமலே போய்விடும். அந்த ஆசிரியர் எங்களுக்க செய்த அநீதி யாருக்கும் தெரியாமலே போய்விடும்.

நான் ரொம்ப சமத்து அதோடு கூட மிகமிக நல்லவள் என்பது போல முகத்தை வைத்துக் கொண்டு 3 வது பெஞ்சில் 2 வதாக உட்கா‌ர்ந்திருக்கிறாளே சுகுனா, அவள் நேற்று என்ன செய்தாள் தெரியுமா? நாங்கள் மூவரும் அவளது டிபன் பாக்சில் உள்ள் தயிர் சாதத்தைத் திருடித் தின்று விட்டோமாம். அந்த ஊசிப் போன தயிர் சாதத்தை பார்ப்பவர்களால் நிச்சயமாக அப்படி சொல்ல முடியாது. திருடியிருக்கலாம் என்பது வரை ஒத்துக் கொள்ளலாம். ஆனால்அதை திங்க முடியுமா? என்ன? அவள் சொன்ன பொய்க்கு யார் தண்டனை கொடுப்பது. இன்று காலை வந்ததும் வராததுமாக எங்களது திட்டத்தை தீட்டினோம். நான் (சங்கர்) மூக்கை உடைக்கலாம் என்றுதான் கூறினேன். ஆனால் இந்த ஆசிரியர்கள் அதை கொலைக் குற்றமாக்கி தூக்கில் ஏற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சிவா இந்த ஐடியாவைக் கொடுத்தான். அவள் உட்காரும் இடத்தின் அடியில் காம்பசை சொருகி வைத்து விடுவது என்று. ஆனால் நான் (சங்கர்) அதை கடுமையாக ஆட்சேபித்தேன். காரணம், அந்த தண்டனை ஒருவருக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டிய தனிச்சிறப்பு வாய்ந்த தண்டனை. வேறு யாருக்கும் அந்த தண்டனையை கொடுத்து, அந்த தண்டனையை அவமதிக்கக் கூடாது. அது ஆசிரியர் பால் பாண்டிக்கு மட்டுமே சொந்தமானது, அதில் யாரும் கைவைக்கக் கூடாது. அந்த அழகான காட்சியை எப்படி விவரிப்பது. அதில் அவர் உட்கார்ந்ததும் துள்ளிக் குதித்து எழும்பி கீழே விழுவாரே என்ன அருமையானதொரு காட்சி அது. தயவு செய்து இதை புரிந்து கொள்ளுங்கள் என்று நான் விளக்கியதும்,அவர்கள் ஒத்துக் கொண்டார்கள். ஆனால் ரமேஷ் கூறிய அந்த தண்டனை மிக அழகானது. அவளது ஒற்றை பக்க ஜடையை கத்தரித்து விடுவது. ஆஹா அருமையான யோசனை.அவள் மொத்தமாக அடங்கி விடுவாள்.அவளது திமிரும அடங்கிவிடும். இனி நம் வழிக்கே அவள் வரமாட்டாள். ரமேஷ் எப்பொழுதுமே புத்திசாலித்தனமாகத்தான் யோசிப்பான். அவனை எங்களுடன் இணைத்துக் கொண்டதற்கு காரணமே அவனது புத்திசாலித்தனம்தான்.

எங்களது திட்டக்குழுவில் ஒரு வழியாக அந்த முடிவு எடுக்கப்பட்டது. காலை ப்ரேயிரின் போது அவளது ஜடையை அறுத்துவிடுவது என்று முடிவு செய்தோம். சிவா அருகில் உள்ள அவனது வீட்டிலிருந்து ஒரு பெரிய கத்தரிக் கோலை எடுத்து வந்தான். ஆனால் அந்த தீரச் செயலை செய்வது யார். என்னை விட தைரியமான மாணவன் வேறு யாரும் இல்லையாம். சிவாதான் கூறினான். அதை எப்படி நான் மறுப்பது. நான் வேறு நிஜமாகவே தைரியமானவனாக இருக்கிறேன். என்ன.......... மாட்டிக் கொண்டால் தூக்கி போட்டிடு மிதிப்பார்கள். அதை நினைத்தால்தான் கால்கள் இரண்டும் லேசாக நடுக்கத்தை பெறுகின்றன. இருப்பினும் நான் என்ன காந்ந்ந்ந்தியா? புத்த்த்த்தரா? இன்னா செய்தாரை மன்னிப்பதற்கு

ப்ரேயர் தொடங்கியது. ஐயோ............ அந்த நாராசமான பாடலை போட்டிடுத் தொலைத்தார்கள். ........."ஒரு தாய் மக்கள் நாம் என்போம்".......... அதை தாங்க முடியாமல் என் உடலுக்குள் என்ன நடந்தது தெரியுமா? .... பித்தநீர் கசப்பாக சுரப்பது போல் அடிநெஞ்சில் சுரந்து பின் மறைந்தது. பல நாட்களாக இந்த ஒரே பாடலை போட்டால் பின் என்ன செய்யும் . தினசரி வாந்தி எடுக்காமல் தப்பிப் பிழைப்பதே பெரும்பாடாக இருக்கிறது. ஆனால் இந்த நல்ல குழந்தைகள் என்று பெயர் எடுத்த சுகுனா போன்ற நடிகைகள் முகத்தை சிரிச்சா மாதிரி வைத்துக் கொண்டு ஒரு போஸ் கொடுப்பார்களே? அதுமிகக் கடினம். அதற்கு மிகுந்ததைரியம் வேண்டும்.அந்த ஒரே விஷயத்துக்காக மட்டுமே நான் அவளை பாராட்டுகிறேன். அவள் கடைசிய வரை முகமூடி அணிந்தது போல் சிரித்த முகத்துடனேயே காணப்பட்டாள்.ஆனால் இன்னும் சிறிது நேரத்தில் அந்த முகத்தின் தன்மையே மாற இருந்தது. நான் பின் வரிசையிலிருந்து மெதுவாக அடிமேல் அடி வைத்து அவளை நெருங்கினேன். என்ன அழகாக சிரித்துக்கொண்டிருந்தாள் தெரியுமா? அவளுக்கே தெரியாமல் அவளது இரட்டை ஜடையை ஒற்றை ஜடையாக்கினேன். அவள் இன்னும் கவனிக்கவில்லை. ஆனால். பின்னே நின்று கொண்டிருந்த கீதா (அவளது தோழி) போட்டுக் கொடுத்து விட்டாள். அப்பொழுது கத்த ஆரம்பித்தவள் தான். அடிவயிற்றிலிருந்து தம் கட்டி 8 கட்டையில் சுருதி சுத்தமாக ஒரு நூறு பர்லாங்கு தூரத்திற்கு கேட்கும் அளவுக்கு வெறித்தனமாக கத்தினாள். கத்தியவள் கத்தியதோடு சும்மா விட்டாளா. கீழே படுத்து கொண்டு அந்தப் பக்கம் 4 முறை, இந்தப்பக்கம் 4 முறை என அங்கப்பிரதட்ஷணம் செய்வது போல உருள ஆரம்பித்துவிட்டாள். ஏதோ பாம்பு கடித்து விட்டதோ என பயந்து போன ஆசிரியர்கள் ஓடி வந்து அவளை தூக்கினார்கள். அது ஏன் அழும் பொழுது கால்கள் இரண்டையும் நீச்சல் அடிப்பது போல் உதைக்கிறாள் என்றுதான் புரியவில்லை.

அவளது ஷேவிங் செய்யப்பட்ட ஒருபக்க தலையை பார்த்தவுடனே புரிந்து விட்டது நிலைமை. ஹு இஸ் திஸ் புரூட்டஸ் என்று பால்பாண்டி வெறித்தனமாக கத்தினார். அவர் ஆங்கில ஆசிரியராம். யாருக்கு புரிகிறதென்று அவர் இவ்வாறெல்லாம் கத்துகிறார் என்றதான் தெரியவில்லை. இப்படித்தான் அவர் ஒவ்வொரு முறையும் எனது கோபத்திற்கு இலக்காகிப் போகிறார். நானும் அவரது பின்பாகத்தை எத்தனை முறைதான் பஞ்சர் செய்வது. அவருக்கு புததி வருவதே இல்லை. அதற்குள்ளாக அந்த கீதா வேகமாக என்னை நோக்கி கையை காட்டி விட்டாள்.

பின் தேர்ட் டிகிரி பாணியில் நடத்தப்பட்ட விசாரணையில், திட்டக்குழுவில் பங்கேற்ற மூவர் வரை மாட்டிக் கொண்டோம். எதிரி நாட்டு ராணுவத்திடம் மாட்டிக் கொண்ட அகதியைப் போல ஆகிப் போனது எங்களது நிலைமை. வற்றாத ஜீவநதியைப் போல சுகுனாவின் கண்களிலிருந்து கண்ணீர் சுரந்து கொண்டிருந்தது. ஒரு வேளை அவள் இவ்வாறு நினைத்துக் கொண்டிருக்காலாம். தன் கண்ணில் கண்ணீர் இருக்கும்வரதான். இவர்கள் மூவரும் அடிபட்டுக் கொண்டிருப்பார்கள் என்று. கடந்த 3 மணி நேரமாக தேம்பி, தேம்பி அழுது கொண்டிருந்தாள். ஆனால் திட்டக் குழுவில் எப்பொழுது முடிவெடுக்கப்பட்டதோ அப்பொழுதே உடம்பை இரும்பாக்கிக் கொண்டுதான் செயலில் இறங்கினேன் நான்.

ஒரு பொது நலனுக்காக தியாகம் செய்வது என்று வந்துவிட்டால் வாய்க்கரிசி போட்டுக்கொண்டு செயலில் இறங்கிவிடவேண்டும் என்பது வீரர்களின் பொதுமொழி. அடி கொடுப்பதைவிட அடி வாங்குவதுதான் உண்மையான வீரம் என்று எம்.கே. காந்தி என்பவர் சொல்லியிருக்கிறாராமே. அவர் பிறந்த நாட்டில் பிறந்துவிட்டு நான் மட்டும் எப்படி வேறு விதமாக இருக்க முடியும். பெற்றுக் கொண்டிருக்கும் தண்டனைக்கு ஈடானது, செய்த செயலின் மகிழ்ச்சி.இரண்டும் ஒன்றையொன்று சமன் செய்து கொள்ளும். ஆனால், இந்த பால்பாண்டி ஏன் வானத்துக்கும், பூமிக்குமாக குதித்தார் என்றுதான் புரியவில்லை.

ஒற்றை பக்க ஜடை இல்லையென்றால் அப்படி என்ன ஆகிவிடப் போகிறது.. சாமிக்கு முடியெடுத்தா; புண்ணியம் என்கிறார்கள். அதே முடியை நான் எடுத்துவிட்டால். மடத்தனமாக கத்துகிறார்கள். ஒரு புரிதலே இல்லாமல் நடந்து கொள்வது இந்தியர்களின் வழக்கம்தான். என்ன செய்வது படிப்பு முடிந்ததும் அமெரிக்கா சென்றுவிட வேண்டும்.

தண்டனை கொடுக்கிறேன் என்கிற பெயரில், காதைப் பிடித்து திருகும் பழைய பழக்க வழக்கத்தை குழி தோண்டி புதைக்க வேண்டும் என்பது என் கருத்து. காரணம் வலி ஒரு பிரச்சனை அல்ல. ரேடியோவுக்கு வால்யூம் ஏற்றுவது போல் கன்னாவின்னாவென காதை பிடித்து திருகிக் கொண்டு சரமாரியாக கேள்வி கேட்கிறார்கள். எப்படி அந்தகாதில் கேட்கும் அவர்களது கேள்விகள். பதில் சொல்வில்லையென்றால் கண்ணத்தில் வேறு அறைகிறார் அந்த பால்பாண்டி. இந்த மடத்தன்ஙகளையெல்லாம் சகித்துக் கொள்ள முடியாமல்தான் பால்பாண்டி அவர்களுக்கு காம்பஸ் வைத்தியம் செய்ய வேண்டியதிருக்கிறது. அவர் என் காதை பிடித்து திருகிக் கொண்டு கேட்கிறார்.

"ஏண்டா இந்த பச்ச குழந்தையோட தலைமுடிய கட் பண்ண"

இந்த நகைச்சுவை கேட்டு நான் சிரிக்காமல் இருந்தது பெரிய விஷயம். அதோடு மட்டுமில்லாமல் அவருக்கு இவ்வளவு நகைச்சுவை உணர்வு இருப்பது எனக்கு இப்பொழுதுதான் தெரிய வந்தது. படைப்பின் விநோதத்தைத்தான் என்னவென்று சொல்வது. பால்பாண்டியிடம் நகைச்சுவை. அதில் முதல் நகைச்சுவை என்னவெனில், முதலில் அது மிகப்பெரிய தவறும் கூட. சுகுனா ஒரு பச்சை குழந்தையாம், இந்த உலகில் எங்கு தேடினாலும் கிடைக்க மாட்டார்கள், தான் பழி வாங்க நினைக்கும் ஒருவனை காயப்படுத்துவதற்காக, தொடர்ச்சியாக 3 மணி நேரம் தன்னை கட்டாயப்படுத்திக் கொண்டு அழும் ஒரு பெண்ணை - அப்படிப்பட்ட ஒரு விநயம் மிகுந்த ஒரு குட்டி பிசாசை எப்படி பச்சை குழந்தை என்று சொல்லலாம் அந்த பால்பாண்டி. அவரை மன்னித்து விடுவதற்கு ஒரே ஒரு வலிமையான காரணமுண்டு. அது அவரது தலைமேல் உள்ள தரிசு நிலம். அவருக்குத் தான் தெரியும். அவ்வளவு நீள தலைமுடியின் அருமை. அவரது மனக்குமுறலும், என் மீதான வெறித்தாக்குதல்களும் ஒரு வித ஆதங்க மனோபாவம் தான் காரணம் என்பதால் அவரை மன்னித்து விடுமாறு என் உள்மனம் கூறியது.

ஆனால் தலைமையாசிரியர் என்று ஒருவர் இருக்கிறாரே. அவருக்கு தர்மராஸ் என்று தவறாக பெயர் வைத்துவிட்டார்கள். அவர் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு தவறான புரிதலிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் ஒருமண்டி விளக்கெண்ணைய் தடவிய பிரம்பிற்கும், மாணவர்களின் ஒழுக்கத்திற்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாக வெகு நாட்களாக தவறாக புரிந்து கொண்டே வாழ்ந்து வருகிறார். ஏதேனும் பிரச்சனை என்று வந்துவிட்டால் அவ்வளவுதான். மாட்டுக்காரன் குச்சியை எடுத்துக் கொண்டு ஓடி வருவதைப் போல. குதித்தோடி வந்து பிரம்பை சுற்றி சுறறி அடிப்பார். பின் நிதானமடைந்தவராய் என்ன நடந்தது என்று விசாரிப்பார். எனது வாழ்க்கை லட்சியங்களுள் இதுவும் ஒன்று. பயன்படுத்தப்படாத திரு. தர்மராஜின் மூளையை கடினமான கற்களைக்கொண்டு தட்டி வெளியேற்ற வேண்டும் என்று. அவருடைய பரிதாபமான மூளைக்காக இதை நான் சங்கடமின்றி செய்வேன்.

அந்த மேன்மை மிகுந்த மனிதர். என் பின்புறத்தில் தாக்கியதில் 7 ரத்தசிவப்பு வரிகள். இதை நான் வாழ்க்கை முழுவதும் மறக்கமாட்டேன் என்று மானசீகமாக அவருக்கு உறுதி கொடுத்து விட்டேன். ஒரு வெட்டப்பட்ட முடிக்கு இவ்வளவு பெரிய கொலைவெறித்தல்கள் அவசியமே இல்லையென்று யாருக்குமே அங்கு தோன்றவில்லை. ஆனால், நடுநிலைமை வாய்ந்த ஒருமனிதர் கூட அங்கு இல்லையே. என்ன நடந்தது. ஏன் நடந்தது என்பதை நேர்மையாக விசாரிக்க. கண்ணால் கண்டதையும், காதால் கேட்டதையும் மட்டுமே வைத்து எப்படி இவர்கள் மிகச்சாதாரணமாக இப்படியொரு முடிவுக்கு வர முடிந்தது. இவர்களெல்லாம் சூழ்நிலைக் கைதிகள். தீர விசாரித்து தீர்ப்பளிக்க லாயக்கற்றவர்கள். இவர்கள் நேர்மையின்றி ஒருசார்பாக நடந்து கொண்டதால் எனக்கு நேர்மை மீதே நம்பிக்கை போய்விட்டது. நாளை நான் நேர்மையின்றி ஏதேனும் ஒரு சூழ்நிலையில் நடந்து கொண்டால் அதற்கு இன்று நிகழ்ந்த இந்த நிகழ்ச்சியே காரணமாக இருக்கும்.

ஒரு வழியாக அவள் அடங்கினாள். அந்த ஆசிரியப் பேய்களும் தங்களது வீர சாகச விளையாட்டுக்களை நிறுத்தியிருந்தார்கள். இத்தனைக்கும் பிறகும் நான் அழவில்லை. ஆனால், சிவாவும், ரமேசும் அரைலிட்டர் அளவிற்கு அழுதிருந்தார்கள். இந்த பள்ளியில் ஒரு பிரச்சனை நடந்து அதற்குத் தண்டனையாக வெயிலில், சுடுமணலில் மண்டி போட வைக்க வில்லை என்றால். அவர்களுக்கு தின்கிற உணவு செரிமானம் ஆகாது. அப்பொழுது ஒரு ஆசிரியர் இவ்வாறு கூறியிருந்தார். அவர் பெயர் ரவீந்தரன்.

"இவனுகளயெல்லாம் உப்பு கொட்டி அது மேல மண்டி போட வைக்கணும்"

அவரை பார்த்து வைத்துக் கொண்டேன். அவரைப் பற்றிய விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன்.அவர் சமீபத்தில்தான் புதிதாக ஒரு ஹீரோ ஹோண்டாவை வாங்கியிருந்தார். அவர் வேறு நடிகர் விஸயை போல தலைமுடியை வாரியிருந்தார். எனக்கு நிறைய தோன்றுகிறது. ஆனால் ஒன்னொன்னாகத்தானே செய்ய முடியும்.

மண்டியிட்டிருக்கும்பொழுது ரமேஷ் இந்தரசகியத்தை என்னிடம், குரலைத் தாழ்த்திக் கொண்டு மகூறினான். எங்களுக்கு வேறு போரடித்துப் போய்விட்டது. அதனால் பேசத் தொடங்கியிருந்தோம். அந்த மட ஆசிரியர் வாயில் விரலை வைத்துக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டும் என்று மிரட்டியிருந்தார்.

(இதுதான் இதுவரை நடந்து போன ப்ளாஷ்பேக்)

ரமேஷ் கூறிய அநத விஷயம் எனக்கு புதிது. நான் இதுவரை யோசித்து பார்த்தது கூட கிடையாது. அவன் கூறினான், ஆசிரியர் அடித்ததுமு; கதறித்துடித்து, அழ வேண்டுமாம். வாங்கிய அடியின் மூலம் எவ்வளவு வலிக்கிறது என்பதை, குரல்வளை தெறிக்க கத்தி கதறுவதன் மூலம் வெளிப்படுத்த வேண்டுமாம். அவ்வளவுதான் விஷயம் அந்த ஆசிரியர் மிரண்டுவிடுவார். தான் ஏதோ மிதமிஞ்சிய காரியத்தை செய்துவிட்டோமோ? என்று வருத்தப்படுவார். பின் அவர் பிரம்பை ஓங்கும் பொழுதே அவரது வேகம் குறைந்துவிடும். அவரது மனநிலை சீர்குலைந்துவிடும். அதனால் தான் நாங்கள் இருவரும் அவ்வளவு கதறித்துடித்து அழுதோம், ஆனால், நீயோ அழவில்லை. அதனால் உனக்கு வலிக்க வில்லை என்று நினைத்துவிட்டார் அந்த பால்பாண்டி. சில சமயங்களில் நடிப்பதில் எந்த தவறும் இல்லை என்று கூறுகிறான்.

எனது வருத்தம் அது இல்லை. உள்ளிருந்து சிரித்துக்கொண்டிருக்கிறாளே அந்த சுகுனா, ஏதோ சாதனை செய்துவிட்டது போல. அவள் சந்தோஷப்படும் விதமாக அவள் முன்னாள், அதுவும் கூலிப்படை அடியாள் போன்றிருக்கும் பால்பாண்டியிடம்அடி வாங்கியதைத்தான் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்த ஒற்றைப்பக்க தலையை வைத்துக் கொண்டு இவ்வளவு அலப்பறையை கொடுக்கும் அவளுக்கு ஏதேனும் ஒரு வகையில் சிறப்புத் தண்டனை கொடுக்க வேண்டும் என்கிற எனது ஆர்வம் எல்லை கடந்து போய் கொண்டிருந்தது.

வெகு நேரமாக வெயிலில் முட்டி போட்டுக் கொண்டிருந்தோம். லேசாக மயக்கம் வருவது போல் இருந்தது எனக்கு. காரணம் வெயில் அல்ல. அந்த பக்கமாக சென்று கொண்டிருந்த ஆசிரியர் அழகுமலை கூறிய வார்த்தைகள்தான்.

அழகுமலை : எவ்வளவு நேரமா மொண்டி போட்டிருக்கீங்க

ரமேஷ் : 4 மணி நேரம்மா சார்.

அழகுமலை: பரவால்ல, மாலை வெயில் உடம்புக்கு நல்லது, கீப் இட் அப்

நிச்சயமாக நல்லது தான். நானும் ஒத்துக் கொள்வேன். எப்பொழுதெனில் அந்த அழகுமலையை அரை நிர்வாணமாக்கி, ஒரு மணி வெயிலில் உட்கார வைக்கும் பொழுது. அலட்டிக் கொள்ளாமல் பொன் மொழிகளை உதித்துவிட்டு செல்லும் பாங்கு தமிழ்நாட்டுக்கே உரிய தனித்தன்மையானதுதான். ஆனால், அதை கேட்பவர் கேட்டுக்கொண்டு கேனத்தனமாக சிரிக்க வேண்டும் என்பதை எத்தனை பேர்தான் சகித்துக் கொள்ள முடியும். ஒரு ஒற்றை வார்த்தை மயக்கமுறச் செய்யமுடியும் என்றால் அவரது திறமையைத்தான் என்ன வென்று சொல்வது.

ஆனால் ஆசிரியர் அழகுமலை பரிதாபமானவர். சென்றவருடம் அவர்தான் எனது வகுப்பு ஆசிரியர். அவரது அறியாமை நிறைந்த வார்த்தைகளால் பல்வேறு வகையான விழுப்புண்களை பரிசாகப் பெற்றவர். ஆனா; இன்றுவரை அவருக்குத் தெரியாது. அதற்கெல்லாம் காரணம் நான்தான் என்று. அவர் ஒரு இன்னொசென்ட். தான் என்ன பேசுகிறோம் என்பதை அறியாதவர். கடவுளே அவரை மன்னித்துவிடு, நானும் மன்னித்துவிட்டேன். சென்ற வருடம் நாங்கள் அதி திறமையுடன் செயல்பட்டோம். ஆனால் இந்த வருடம் தான் எங்களது திறமை மங்கிவிட்டது.

பரிதாபப்பட்டு என்று சொல்ல முடியாது. ஆனால் வெயிலில் மய்ஙகி விழுந்து சிறுவர் கொடுமைச் சட்டத்தில் சிக்கிக்கொள்ளக் கூடாது. என்று நினைத்தார்களோ என்னவோ? எங்களை வகுப்பறைக்குள் அனுமதித்தார் ஆசிரியர். நிழலுக்கு வந்ததும் எனது மூளை சுறுசுறுப்படைந்தது. என்னா; கடடுப்படுத்த முடியவில்லை பழிவாங்கும் எண்ணத்தை. திட்டங்கள் ஆழ்மனதுள் தன்னிச்சையாக தீட்டப்பட்டுக் கொண்டிருந்தன. (நானெல்லாம் அப்படியில்லை, நானெல்லாம் அன்பில் தோய்த்தெடுக்கப்பட்ட ஆத்மா என உறுதியாக நம்புபவர்களுக்கு மட்டுமே ஆட்சேபிக்க உரிமை உண்டு)

எனது பழிவாங்கும் படலத்தின் முதல் கட்டமாக எனது நோட்டின் கடைசிப் பக்கத்தில் எழுத ஆரம்பித்தேன்.

1) சுகுனா அலைஸ் நாடகக்காரி

2) பால்பாண்டி அலைஸ் ஹிட்லர்

3) தர்மராஜ் அலைஸ் காதுகேளாதோர் சங்க உறுப்பினர்
(காரணம் , முதலில் தண்டனை கொடுத்து விட்டு பின்னர் விஷயம் என்னவென்று கேட்பவருக்கு காது இருந்து தான் என்ன பிரயோஜனம்)

4)அழகுமலை அலைஸ் இன்னோசென்ட் மங்கி
(எனக்கு விருப்பம் இல்லைதான் இருப்பினும் ஆசையாய் உள்ளது.)

5) கீதா அலைஸ் பொம்பள எட்டப்பன் ஆர் எட்டப்பி

6) ரவீந்திரன் அலைஸ் உப்பு வியாபாரி
(இவருக்கு போனஸ் தண்டனை வழங்க வேண்டும் என்பது எனது சிறப்பு விருப்பம்)

சாக்கடைப் பள்ளத்தில் சுகுணா

நாற்றத்தைப் பற்றி உலகின் சிறந்த தத்துவ ஞானிகளால் ஆயிரம் பக்கங்களுக்கு விளக்கப்பட்ட ஒருபுத்தகத்தை (ஒருவேளை இருந்தால்) தலை கீழாக புரட்டிப் படித்து தெளிந்த ஒருவர் இன்னும் அதிகமாக அதைப்பற்றி தெரிந்து கொள்ள விரும்புவாரேயானால், எங்கள் பள்ளி அருகே உள்ள அந்த சாக்கடைக்கு வந்தால் போதும். அவர் 7 ஜென்மங்களுக்கும் சேர்ந்தாற் போல் புரிந்து கொள்வார் நாற்றத்தைப் பற்றி. அப்படி ஒரு நாற்றம். இப்படியொரு நாற்றம் மிகுந்த சாக்கடையை பொறுத்து கொண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் எங்கள் பள்ளிக்கு ஜனாதிபதியாக பார்த்து ஏதேனும் விருது கொடுக்கலாம். ஆனால் இங்குதான் தகுதிகள் அங்கீகரிக்கப்படுவதே இல்லையே.

அன்று ஒருநாள் அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்த பொழுதுதான் எனக்கு இந்த சிந்தனை தோன்றியது. சுகுனாவை அதற்குள் தள்ளிவிட்டால் என்ன? நினைக்கும் பொழுதே சந்தோஷம் என்ற வார்த்தையின் அர்த்தம் உணர்ந்தேன். ஆனால்அவள், தனக்கு இப்படியொரு அநியாயத்தை செய்வது யார் என்பதை மட்டும் கண்டுகொண்டு விட்டால் அவ்வளவுதான். அவள் ஒரு பொம்பளை ஷேக்ஸ்பியர். ஒரு குட்டி நாடகத்தை எழுதி,இயக்கி, நடித்து காண்பித்து, சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் பரிசையும் வாங்கி விடுவாள். ஆகையால் அவள் யாரால் தான் தள்ளப்படுகிறோம் என்பதை அறியாதவளாக இருக்க வேண்டும்.

என்ன செய்வது என கொடூரமாக யோசித்ததில் எனக்கு இந்த வழிதான் புலப்பட்டது. விஷயம் சுலபமாக முடிந்துவிடும் இவ்வாறு செய்துவிட்டால். அதாவது அவளால் பார்க்க முடியாமல் போய்விட வேண்டும் அவளது கண்கள் சிறிது நேரம் தெரியாமல் இருந்துவிட்டால்போதும். ஆனால் நினைக்கவே எனக்கு பயமாகத்தான் இருக்கிறது. அவளது கண்கள் துடித்து விடுமே. மிளகாய் பொடி என்றால் சும்மாவா? எனது பிரார்தனை எல்லாம் இதுதான்.அவளது கண்களுக்கு நிரந்தர பாதிப்பு எதுவும் ஏற்பட்டுவிடக்கூடாது.

அந்த மளிகைக் கடைக்காரரிடம் எனது சந்தேகத்தை கேட்ட பொழுது அவர் என்னை முறைத்துப் பார்த்தார். அந்த பார்வையில் ஒரு மனைவி தன் கணவன் மீது கொண்டுள்ள சந்தேகப்பார்வையின் தெறிநிலை தெரிந்தது. தவறான ஆளிடம் கேட்டுவிட்டோமோ என்ற பயம் வந்து விட்டது எனக்கு. அவர் என்ன கண் மருத்துவரா? இந்த கேள்வியை ஒரு கண் மருத்துவரிடம் அல்லவா கேட்டிருக்க வேண்டும். ஆனால் எனது ரகசியத் திட்டத்தில் ஓட்டை விழுந்து விட்டதோ, அவசரப்பட்டு திட்டத்தை வெளிப்படுத்தி விட்டோமோ? என்கிற பயம் வேறு என்னை தொற்றிக்கொண்டது.

கண்களில் மிளகாய்ப் பொடி விழுந்துவிட்டால் என்ன ஆகும் என்ற கேள்வியை எந்த நம்பிக்கையான ஆளிடம் கேட்டு தெறிந்து கொள்வது. நிச்சயமாக அதை தெரிந்து கொண்டுதான் நிறைவேற்ற வேண்டும் என்கிற உறுதியோடுதான் இருந்தேன். நேற்றுவரை. நேற்று எங்கள் வீட்டு: சமையலறையில் எனது அம்மாவின் கண்களில் மிளகாய் பொடி விழுந்துவிட்டது. சிறிது நேர கதறல், அழுகைக்குப் பின் சகஜ நிலைக்கு வந்துவிட்டார். இதை கடவுளின் சமிஞையாகவே எடுத்துக் கொள்ள வேண்டியதிருக்கிறது. அநத கடவுள் என்னுடைய ஆதரவாளன் என்பதை என்னால் நம்ப முடியவில்லைதான். இருப்பினும் துணிவைப்பற்றி சொல்வதற்கொன்ன. நான் வேறு இயற்கையிலேயே துணிவுள்ளவன்.

"எதிரி என்று வந்துவிட்டால் எதிரிதான். நியாயம் கிடைக்கவில்லையென்றால் பறித்துக் கொள்ள வேண்டியதுதான். யாரிடம் கேட்க வேண்டும். எதற்காக கேட்க வேண்டும். துணிவுள்ளவன் செய்வதுதான் நியாயம்",

எனது சிந்தனை உரமேற்றப்பட்டுக் கொண்டிருந்தது, அவளது வருகைக்கா அந்த மரத்தடியில் வெகு நேரமாக காத்து;க கொண்டிருந்த போது. இன்று ஒரு சரித்திர நிகழ்வு நிகழப் போகிறது. ஒரு திமிர் பிடித்தவிளின் கொட்டம் அடங்கப் போகிறது. இன்னும் சில நிமிடங்கள்தான். நிர்ணயிப்பவர்களுக்கு மட்டுமே இவ்வுலகில் அமைதி கிட்டும். சகித்துக் கொண்டிருக்கும் இந்திய குப்பகைளில் நானும் ஒருவன் அல்ல. நான் தனித்தன்மை வாய்ந்தவன். முடிவெடுப்பேன். நிறைவேற்றுவேன்.

இந்த 2 மாதங்களில் மொட்டையடிக்கப்பட்டிருந்த அவளது தலையில் சிறிது முடி வளர்ந்திருந்தது. நான் எதிர்பார்த்தது போலவே தனியாகவே வந்து கொண்டிருந்தால். அந்த மிளகாய் பொடியை கைகளில் வைத்திருந்த போதே எரிச்கலைக் கொடுத்தது. கடைசி நேரத்தில் எனது முடிவில் லேசான தடுமாற்றம் ஏற்பட்டது. இருப்பினும் நிறைவேற்றுபவர்களுக்கு என்று தனிச்சிறப்பு வாய்ந்த குணம் ஒன்று உண்டு. அது, முடிவென்று ஒன்றை எடுத்துவிட்டால் அவ்வளவுதான், அவர்கள் பேச்சை அவர்களே கேட்கமாட்டார்கள்.

அவள் வந்து கொண்டிருந்தாள். எனக்குள் அப்படியொரு அக்தர் வேகம். மறைவிடத்திலிருந்து மிளகாய் பொடியை வீசியெறிந்தேன். அது காற்றில் பறந்து அவள் கண்களை பதம் பார்த்தது. இனி அடுத்த கட்ட நடவடிக்கை. ஆனால்........... ஆனால்.............. எனக்கு ஏன் புரியாமல் போய்விட்டது. அவள் கத்தினால் அடுத்த மாநிலத்தில் தூங்கிக் கொண்டிருப்பவர்கள் கூட அலறியடித்தபடி எழுந்து தறிகெட்டு ஓடுவார்கள் என்று. அவள் குரல்வளைக்கு அப்படியொரு சக்தி. ஆனால் என்னுள் இருக்கும் அசாதாரணத் திறமை எனக்கே அப்பொழுதுதான் தெரிய வந்தது. நான் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தேன். அவளை சாக்கடையில் தள்ளுவதற்கு நேரம் கூடி வரவில்லை. அவள் இது போன்று கத்தி கொண்டிருக்கும் பொழுது, நான் அவள் அருகில் இருப்பது அவ்வளவு உசிதமான விஷயமாக இருக்காது.

அந்த நேரத்தில் சாலையில் 1500சிசி குதிரை சக்தி திறனுடன், ஒலிம்பிக் ஓட்டப் பந்தய வீரனைப் போல், கண்மூடித்தனமாக (பதற்றத்தில் ஏன் கண்கள் மூடிக் கொள்கின்றன) ஓடிக்கொண்டிருந்தேன். இன்னும் அவள் குரல் என் காதுகளில் கேட்டுக் கொண்டிருந்தது. கடவுளே ஒன்றரை கிலோமீட்டராவது கடந்திருப்பேனே என்பதை ஆச்சரியத்துடன் நினைத்துப் பார்க்கையில் அவளது குரலின் வலிமையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

ஆனால் நேரம் சரியிலலை என்றால் ஒருவன் தப்பி ஓடிதான் என்ன பிரயோஜனம். எங்கள் பள்ளி தலைமையாசரியர் திரு. தர்மராஜ் ஒரு ஜாக்கிசான் ரசிகர் என்பது எனக்கு இதுநாள் வரை தெரியாமல் போய்விட்டது. என்னமாக டைவ் அடித்தார் தெரியுமா?. நான் ஓடி வந்து இடித்த வேகத்தில், ஒரு முழு சுற்று அந்தரத்தில், என்னவொரு லாவகமாக, அதைப் பார்க்க நூறு கண்கள் வேண்டும். ஆனால் மகிழ்ச்சி என்ற ஒரு விஷயம், குதூகலம் என்கிற அந்த ஒரு விஷயம் போர்க்கல பய நிலையிலும் ஏற்படும் என்கிற உண்மையை அப்பொழுதுதான் உணர்ந்தேன். அவர் சமீப காலமாக தனது முக அழகை கூட்டுவதற்காக கருப்பு கூலிங்கிளாசை அணிய ஆரம்பித்திருந்தார். வெயில் பொறுக்க முடியவில்லையாம்.இப்பொழுதான் தெரிகிறது, கருப்பு கண்ணாடி போட்டால் குத்து மதிப்பாகத்தான் அவருக்கு கண் தெரியும் என்று. ஏனென்றால் அந்த நேர் சாலையில் என்னை தாராளமாக தவிர்த்திருக்கலாம் அவர்.

இன்னொரு குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அது, அந்த நிமிடத்தில் ...இல்லையில்லை, அந்த நொடியில் எனக்கேற்பட்ட பெருமையுணர்வு. நான் ஒரு இநதியன் என்கிற பெருமையுணர்வு. இந்தியாவில் பிறந்ததற்காக அடிக்கடி நான்பெருமையும், மகிழ்ச்சியும் கொள்ள வேண்டியிருக்கிறது. எப்படி இதையெல்லாம் மறைக்க முடியும். ம்....... திரு. தர்மராஜ் விழுந்த இடம் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது. இதை நான் புரிந்து கொள்ளவே இல்லை. ஏன்....... ஏன்.......... ஒரு தெருவில் திறந்தவெளி சாக்கடைதான் இருக்க வேண்டுமா? இரண்டு, மூன்று, நான்கு......... இந்தியாவில் அதற்கு மேலும் எதிர்பார்க்கலாம். தடுக்கி விழுந்தால், கடவுளே அது சாக்கடையாக இல்லாமல் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். கடவுளுக்கு உங்கள் மேல் பிரியம் இருக்கும் பட்சத்தில் உங்களை தரையில் விழ வைக்கலாம். அல்லது அவராலும் முடியாமல் போகலாம். அவரை அநாவசியமாக திட்டக் கூடாது. அப்படிப்பட்டதொரு வேண்டுதலை நிறைவேற்றுவது கடினமான விஷயம் இந்தியாவை பொருத்தவரை. ஆதலால் அவரை கருணையோடு மன்னித்து விடலாம்.

திரு. தர்மராஜ் சாக்கடையில் தனது புனித முழுக்கை நிறைவேற்றிக் கொண்டிருந்த சமயத்தில். எனது மூளையில் அட்ரீனல் கன்னபின்னாவென சுரக்க ஆரம்பித்துவிட்டது. என்னால் இன்னும் வேகமாக ஓட முடிகிறதென்றால், இன்னும் புரிந்து கொள்ளவில்லை உலகம் இந்திய ஓட்டப்பந்தய வீரர்களைப் பற்றி என்றுதான் அர்த்தம்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு

எங்கள் பள்ளியில் விடுமுறை எடுக்க வேண்டுமென்றால் விடுமுறைக் கடிதம் கொடுக்க வேண்டும். அப்படியில்லையென்றால் 2 பிரம்படி. வெட்டித்தனமாக உட்கார்ந்து கடிதம் எழுதிக் கொண்டிருக்க யாருக்குத்தான் நேரம் இருக்கிறது இங்கே. அடிப்பது ஒரு இயந்திரமாக இருந்தால் கணக்கு வைத்துக் கொள்ள வசதியாக இருக்கும். அதனிடம் இவ்வாறு கூறலாம், இன்னும் இரண்டடி சேர்த்துக் கொடு எனக்கு மேலுமொருநாள் விடுமுறை தேவையாய் இருக்கிறது. ஆனால் அடிப்பது ஆசிரியராய் அல்லவா இருக்கிறார். அவர் கோபத்தில் கதறிக் கொண்டே அடிப்பதை பார்க்கும் பொழுது சிறிது பரிதாபம் தோன்றுகிறது. அவருக்கு ஏற்படப் போகும் ரத்தக் கொதிப்பு நோய்க்கு நான் ஆளாகி விடுவேனோ? என்பதை நினைத்துப் பார்க்கையில் தாழ்வு மனப்பான்மையில் மனம் புழுவாய் துடித்துப் போகிறது.

2 நாள் கழித்து என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்வதற்காக பள்ளிக்கு வந்தேன். அங்கே துணைத் தலைமையாசிரியர், விடுமுறைக் கடிதம் கொடுக்காதவர்களை அடித்துக் கொண்டிருந்தார். அந்த நீண்ட வரிசையில் நானும் போய் நின்று கொண்டேன். எனது பார்வை எல்லாம் தலைமையாசிரியர் அறையை நோக்கித்தான் இருந்தது. அவரை அங்கு காணோம். சாக்கடைக்குள் விழுந்தமனிதர் எழுந்தாரா என்று கூட பார்க்கவில்லை. பள்ளிக்கு தலைமையாசிரியர் வரவில்லையென்றால், துணைத் தலைமையாசிரியர் தான் பொறுப்பேற்றுக் கொண்டு பிரம்படி கொடுப்பார். இந்த வேண்டாத வேலையை சலிப்பின்றி செய்ய வேறு யாராலும் முடியாது. யார் வருத்தப்படுகிறார்கள், இவர்கள் அடிக்கிறார்களென்று. சலிப்பு தட்டிவிட்டது. இதற்கு வரிசையில் வேறு நிற்க வேண்டும். அரைமணி நேரம் வீணாய் போவதைத் தவிர வேறொன்றும் நடக்கப்போவதில்லை. என்முறை வரும் போது து.த மிகவும் கலைத்து போயிருந்தார். இது தேவையா? என்பது போல் பார்த்தேன். அவர் புரிந்து கொண்டதாய் தெரியவில்லை. வறண்டு போன உதட்டை ஈரப்படுத்திக் கொண்டு இரண்டடி கொடுத்தார். அந்த நிமிடத்தில் கடவுளிடத்தில் பிரார்த்தனை செய்தேன்.

''கடவுளே அவரைக் காப்பாற்று"

சுகுனாவுக்கு என்னவாகியிருக்கும் என்கிற கேள்வி என் மனதை அறித்துக் கொண்டிருந்தது. அவள் இன்னும் பள்ளிக்கு வரவில்லை. தூரத்தில் ரமேசும், சிவாவும் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களிடம் விசாரித்ததில் இப்படிக் கூறினார்கள்.

சுகுனாவின் முகத்தில் யாரோ ஆசிட் அடித்து விட்டார்களாம். அதனால் அவளது முகம் முழுவதும் வெந்து விட்டதாம். மருத்துவமனையில் அவள் இன்னும் வலி தாங்காமல் கத்திக் கொண்டிருக்கிறாளாம். இரண்டு போலீஸ் காரர்கள் வந்து விசாரித்து விட்டு போனார்களாம். மருத்துவ பரிசோதனையில் அவளது முகத்தில் வீசப்பட்ட ஆசிட் ஸ்பெசலாக ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டதாம். அதை தீவிரவாதிகள் மட்டும் தான் பயன்படுத்துவார்களாம்.

"ஐயோ!!!!????"

"ஐயோ, நான் தீவிரவாதி இல்லை, நான் சத்தியமா???"

கடைசியாக அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரே குரலில் கூறினார்கள்

"அவள் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிறாள்"

எனது இதயத்திலிருந்து சுமார் ஒன்றரை லிட்டர் இரக்கம் சுரந்து விட்டது. பிறகு கழிவிரக்கம், அதோடு சேர்ந்து என்னன்னமோ என் மனதை பிசைந்தெடுத்தது. இங்கிருந்து மன்னிப்பு கேட்டால் அவள் காதுகளுக்கு கேட்குமா? அப்படியே மன்னிப்பு கேட்பதால் அவளது கண்களில் வலி குறையப் போகிறதா என்ன?

ஆனால், இந்த ஜெர்மனி ஆசிட் புதுக்கதையை பற்றி யோசித்துக் கொண்டிருந்த பொது, கண்கள் லேசாக ஈரமாகியிருந்தது. அந்த கண்ணீர்த் துளிகள் நிரம்பிய பார்வையில் யாரை பார்த்தாலும் சுகுணாவை போலவே தெரிந்தது. அதோ தூரத்தில் ஒருபெண், பார்ப்பதற்கு சுகுனாவைப் போலவே தெரிகிறாள். அவள் அருகில் வரவர என்ன ஆச்சரியம், இன்னும் சுகுனாவைப் போலத்தான் தெரிகிறாள். ஒருவேளை கண்களை கசக்கி கொண்டால் வேறு ஒரு பெண்ணாக மாறலாம். ஆனால் சினிமாவில் எல்லாம் பொய் சொல்கிறார்கள். இதெல்லாம் உண்மையில்லை. அவள் சுகுனாவேதான். இது கனவு கூட இல்லை. ஏனென்றால் கில்லினால் வலிக்கிறதே. அவள் கண்கள் நன்றாகத்தான் இருந்தன. அவள் என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டே சென்றாளே, எனக்கு நன்றாகத் தெரியும் அந்த பார்வையைப் பற்றி.

ஆனால் எனக்கு ஏன் புரியாமல் போய் விட்டது. சிவா, ரமேஷ் இருவரும் சிறந்த கதாசிரியர்கள் என்பது. சல்லவேலை 10 நிமிடத்தில் பெல் அடித்துவிட்டது. இல்லையென்றால் என்னை பின்லேடனோடு சேர்த்தல்லவா கதை கட்டிவிட்டிருப்பார்கள். அவளது பார்வையில் என்னை அடையாளம் கண்டு கொண்ட எந்த அறிகுறியும் இல்லை. சோ என்னுடைய ஆப்பரேஷன் சக்சஸ்.

ஒருவாரம் அமைதயாக கடந்திருந்தது. ஆனால் அமைதியாக நாட்களை கழிப்பது தான் எவ்வளவு கடுமையாக இருக்கிறது. தூக்கம், மயக்கம், மந்தம், அமைதி எல்லாம் ஒன்று போலவே இருக்கிறது. இதற்கு துன்பத்திலேயே உழலாம். துன்பத்திலாவது உணர்ச்சிகளுக்கு ஏதேனும் வேலையிருக்கும். அமைதியில் ஒன்றுமேயில்லை. சிறைக் கூடங்களைப் போன்றிருக்கும் இது போன்ற பள்ளிகளில், என் போன்ற கிளர்ச்சியாளனுக்கு என்னதான் வேலை. எனது கிரியேட்டிவிட்டி சுத்தமாக செத்துவிடும் போல இருந்தது. ஆனால் என்றுமே என் உள்ளத்தை புரிந்து கொண்டவள் அந்த கடவுள்தான். அதெப்படி ஒரு வாரத்திற்கு ஒருவனை நிம்மதியாக விடலாம் என்று யோசித்தாரோ என்னவோ? ஆரம்பித்துவிட்டார் தனது குட்டி கலாட்டாவை

ஒரு வாரத்திற்குப் பின் தலைமையாசிரியர் பள்ளிக்கு வந்திருந்தார். அவரை பார்த்த பொழுது உடலில் சிறிது நிறம் ஏறியிருப்பது தெரிந்தது. கருமை நிறம் இன்னும் கருமையாக மாற முடியும் என்பதை நான் நம்ப மாட்டேன் என்று யாரும் கூறாதீர்கள். நான் சொல்கிறேன் நம்பித்தான் ஆக வேண்டும். அது உண்மைதான். மற்றபடி அவரது உடலில் எந்த விதமான அடியோ, சிராப்புகளோ இல்லை. ஆள் நன்றாகத்தான் இருந்தார். ஆசிரியர்கள் பேசிக் கொண்டதை வைத்து எனக்கு இந்த விஷயம் தெரிய வந்தது. அவர் விஷவாயுவால் தாக்கப்பட்டு ஒரு வாரமாக அரசு மருத்துவமனையில் சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது. சாக்கடையில் விழுந்ததை மறைத்து எவ்வளவு அழகாக சமாளித்திருக்கிறார் மனிதர்.

அது என்னவிதமான விஷவாயு என்பது எனக்குத்தான் தெரியும். தண்டனைகள் எல்லாம் திருந்துவதற்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. ஆனால் திரு. தர்மராஜின் தலைக்குள் 4 மூலைகளிலும் தேடினாலும் கிடைக்காது அந்த மூளை. மூளையே இல்லாத ஒரு மனிதரை இந்த உலகின் எந்த ஒரு மூலையிலும் தேட வேண்டாம். தர்மராஜ் தனது தேடுதல் வேட்டையை துவங்கியிருந்தார். அவரை சாக்கடையில் தள்ளி விட்டவன். சிகப்பு கலர் சட்டை போட்டிருந்தானாம்.அவர் உடல் டைவ் அடித்துக் கொண்டிருக்கும் பொழுது அதைக் கவனித்தாராம். ஆனால் நான் சிவப்பு கலரில் ஜட்டி கூட போடப் போவதில்லை என்பது அவருக்கு எங்கே தெரியப் போகிறது.

தர்மராஜும், பால்பாண்டியும் இணைந்து அந்த கல்பிரிட்டை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியிருந்தார்கள். ஆம். எனக்கும் இனி அவன் யாரோதான். பாருங்கள் அவன் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டான். எங்கள் பள்ளி தலைமையாசிரியரையே பிடித்து சாக்கடையில் தள்ளிவிட்டான். எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டான். அவன் யாரோ ஒரு 3 வது மனிதன். அவனைப் பற்றி இனி எனக்கென்ன கவலை.

பால்பாண்டியும், தர்மராஜும் தங்களிடம் இல்லாத மூளையை இருப்பதாக நம்பி, அதை கசக்கி பிழிந்து, பள்ளியில் சந்தேகப்படும்படியாக 10 பேரை தேர்ந்தெடுத்தார்கள். அந்த 10 பேரில் யாரோ ஒருவன் தான் திரு. தர்மராஜை சாக்கடையில் பிடித்து தள்ளியிருக்க வேண்டும் என உறுதியாக நம்பினார்கள். துரதிஷ்டவசமாக அந்த 10 பேரில் நானும் ஒருவன். சிவாவும், ரமேசும் துணைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கே நன்றாக தெரிநிதிருக்கிறது. அநியாயமாக தண்டிக்கப்பட்ட ஒருவனின் மனம் சும்மா இருக்காது. அது வேதனையில் புரண்டு துடித்துக் கொண்டிருக்கும். அப்படிப்பட்ட மனது தன்னை சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றால் பழி வாங்க துடிக்கும். அப்படி பழி வாங்க துடிக்கும் 10 பேரை குறிப்பாக நாங்கள் 3 பேரை பற்றி அந்த விநயம் மிகுந்தமனிதர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. சின்னஞ்சிறு வயதில் அதர்மத்தை இது போன்ற அநாகரிகமான விநயம் மிகுந்த மனிதர்களிடமின்றி வேறு யாரிடம் கற்றுக் கொள்ள முடியும்.

மனம் முதிர்ச்சியடையாத சிறுவர்கள் எங்களிடம் பழிவாங்க துடிக்கிற மனம் இருக்கிறதென்றால் அது இயல்பு. நாங்கள் மறைந்திருந்து பழி வாங்க முயற்சிக்கிறோம். ஆனால் இந்த முதிர்ச்சியடைந்த, பக்குவமடைந்த, நியாயத்தையும், நேர்மையையும், நீதியையும் கட்டிக்காத்து தூக்கி சுமக்கிற ஆசிரியர்கள் இருக்கிறார்களே, அவர்களைது பழி வாங்க துடிக்கிற மனதை எந்த கணக்கில் சேர்ப்பது. ஒரு சர்வாதிகார தலைவனைப் போல, தங்களது பழிவாங்கும் செயலை மேடையேற்றி அறங்கேற்றுவார்கள்.

ஒவ்வொரு மாணவனாக தனியறைக்கு அழைத்து சென்று விசாரித்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் மூவரும் பின் வரிசையில் அமர்ந்திருந்தோம். சிறிது நேரம் கழித்து சிவா ஏதோ கெட்ட வாடை அடிப்பதாகக் கூறினான். அது வேறொன்றுமில்லை. முன்னாள் உட்கார்ந்திருந்தவன் ஒன்றுக்கு போய்விட்டான். அதோடு கண்ணீர் வேறு உடலெல்லாம் வியர்த்துவிட்டது அவனுக்கு. சைக்கிளுக்கு காற்றடிப்பது போல் மூச்சுவிட்டுக் கொண்டிருந்தான். சுருக்கமாக சொல்வதென்றால் தனது உடலிலுள்ள நீர்ச்சத்தை எல்லாம் வெளியேற்றிக் கொண்டிருந்தான். இது போன்ற மரண அவஸ்தையில் குழந்தைகளை தள்ளுவதுகொடுமையான விஷயமாகும். அதிகாரம் என்ற ஒன்று என் கையில் மட்டும் இருக்குமேயானால் குறைந்த பட்சம் 5 ஆண்டு சிறைத் தண்டனையாவது அளித்திருப்பேன். ஆனால் உலக சரித்திரத்தில் இதுவரை அவ்வாறு நிகழ்ந்ததேயில்லையே. அதிகாரம் எல்லாம் மனசாட்சி இல்லாத அடக்கி ஆள்பவர்களிடம் மட்டும் தானே கொட்டி கிடந்தது.

அவனுக்கு ஆறுதலாக இருக்குமேயென்று அருகிலுள்ள கேனிலிருந்து சிறிது தண்ணீர் பிடித்து கொடுத்தேன். அவன் அதையும் குடித்துவிட்டு உடனே........ அதெப்படி குடித்தவுடன் வெளியேற்றுகிறான் என்பதுதான் புரியாத புதிராக இருந்தது. விசாரணைக்கு உள்ளே சென்றவன் என்னால் இதற்கு மேல் தொண்டை வெடிக்க கதற முடியாது என்பதை பறைசாற்றுவது போல கதறித் துடித்தான்.

அந்த அறைக்குள் குடுகுடுவென ஓடும் சப்தம் கேட்டது. அவனை ஓடவிட்டு துரத்தி துரத்தி அடிகெ;கிறார்கள் என்று நினைக்கிறேன். ஆண்டவன் தன் இறுதித் தீர்ப்பு நாளில் உலகின் கொடூரர்களையெல்லாம் வரிசைப்படுத்தி நிற்க வைப்பாரேயானால், ஹிட்லருக்கு பின்னே நிற்பது தர்மராஜாகாத்தான் இருக்கும். ஏனெனில் முன் இடத்தை பால்பாண்டி விட்டுக் கொடுக்க மாட்டார். அது அவருக்கு மட்டும்தான். எனக்கு மேலுலுகத்தில் ஒரு வேலை கிடைக்கும் என்றால், அந்த வேலையை நரகத்தில் போட்டுத் தருமாறு கெஞ்சிக் கேட்டுக் கொள்வேன் அந்த கடவுளிடம். ஏனெனில், ஒருவேளை மிகப்பெரிய எண்ணெய்ச் சட்டியில் கொடுங்கோலர்களைப் போட்டு வறுத்தெடுக்கும் இடத்தில் தர்மராஜீம், பால்பாண்டியும் வரலாம். எனக்கென்னவோ அந்த நிமிடத்தில் என் கடமையைச் செய்வதுதான் எனக்கு சொர்க்கமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

15 நிமிடங்களுக்குப் பிறகு

அறையின் உள்ளே இருந்து உயிருடன் அவன் வெளியே வந்து கொண்டிருந்தான். ஆம், அவனை உயிருடன் விட்டு விட்டார்கள். ஏனென்றால் அவன் தவறு செய்யவில்லை என்பது அவர்களது சிறு மூளைக்கு எட்டிவிட்டதாம். அதனால் அவனை விட்டு விட்டார்களாம். என்ன கொடுமை இது. இவர்களுக்கு புரிதல் என்பது இவ்வளவு மந்த வேகத்தில் நடக்கிறது. இப்பொழுது நன்றாக புரிந்துவிட்டது. இந்த 10 பேரையும் விசாரணை என்ற பெயரில் தண்டித்து விட்டால்,அதில் தவறு செய்தவன் எவனோ, அவனும் தண்டிக்கப்பட்டு விடுவான். இதன் மூலம் அவர்களது மனம் நிம்மதியடைந்துவிடும். என்ன ஒரு தந்திரம். என்ன ஒரு குள்ளநரித்தனம். ஓ....கடவுளே, குள்ளநரியிடம் வேறு நான் மன்னிப்பு கேட்க வேண்டும். குள்ளநரியுடன் இவர்களை ஒப்பிட்டு பேசி, குள்ளநரியை அசிங்கப்படுத்திவிட்டேனே. இது சத்தியமாக நியாயமே இல்லை. தவறிழைக்காத அப்பாவிகள் எல்லாம் தண்டிக்கப்படுவார்களே. என்னை ஒரு செகுவேராவாக மாற்றாமல் விட மாட்டார்கள் போல இவர்கள். இவர்களுக்கு பாடம் கற்பிக்க என் மணம் துடிக்கிறது. ஆனால், சத்ரியனாக இருப்பதைவிட சாணக்கியனாக இருப்பதே சிறந்தது என்பதை நினைத்து என்னை கட்டுப்படுத்திக் கொண்டேன்.

இரண்டாவதாக உட்கார்ந்திருந்தவனை உள்ளே அழைத்தார்கள். அதுவரை மயக்கம் போடாமல் நிமிர்ந்து உட்கார்ந்திருந்தவன் அப்பொழுதான் தலை சாய்ந்து கீழே விழுந்தான். அவன் அடித்த சிறுநீரின் மேலேயே மயங்கி விழுந்திருந்தான். இது சிரிப்பதற்காக அல்ல. தூக்கு தண்டனைக் கைதிகளுக்கும், கொலை செய்யப்படப் போகிற போர் கைதிகளுக்கும் மட்டுமே நேரக்கூடிய கொடுமை இது. அவன் மேல் எனக்கு பரிதாபம் பிறந்தது. அவன் மன்னிக்கப் பட்டான். அவனைத் தூக்கிச் சென்றார்கள்.

தூக்கிச் செல்லப்பட்ட அவனை சிவாவும், ரமேசும் குறுகுறுவென உற்று பார்த்தார்கள். அவர்களது முகத்தை உற்றுப் பார்க்கும் பொழுது மனதிற்குள்ளாக ஏதோ திட்டம் தீட்டுகிறார்கள் என்பது மட்டும் புரிந்து விட்டது. ஆனால் எனக்குப் புரியாமல் போய்விட்டது அவர்களுக்கும் யூரின் வரும் என்பது. அவர்களால் மயக்கம்போடுவது போல் நடிக்க முடியும் என்பது. ஒருவேளை அவர்களும் மன்னிக்கப்படுவார்கள் என்பது.

அந்த வெட்கங்கெட்ட மடையர்களுக்கு வீரத்தைப்பற்றி, துணிவை பற்றி எடுத்துக் கூற வேண்டியதாய் போய்விட்டது. வெள்ளையனுக்கு அஞ்சாத வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி அவர்களுக்குக் கூறினேன். தூக்குக் கயிற்றுக்கு முத்தமிட்ட பகத்சிங்கை பற்றி எடுத்துக் கூறினேன். 10 நிமிட உபதேசத்தில் அவர்கள் கண்களில் ஏதோ ஒருவித ஒளி வீசியது. சரியாக சொல்லத் தெரியவில்லை. எனக்கு அப்படித்தான் தோன்றியது. வெள்ளையனாக இருந்தால் என்ன இந்த வௌங்காத பால்வாண்டியாக இருந்தாலா; என்ன? எல்லாம் ஒன்றுதான் என்று கூறினேன்.

அடுத்ததாக ரமேஷ் அழைக்கப்பட்டான். அவன் தோல்களை குலுக்கி கொண்டு ஒரு வீரனைப் போல் எழுந்து சென்றான். எனக்கு ஆச்சரியமாக போய்விட்டது. வார்த்தைகளுக்கு இவ்வளவு சக்தியா என்று. ஆனால் உள்ளே சென்றவன் ஏன் அபாயச் சங்கை எடுத்து ஊதினான் என்றுதான் புரியவில்லை. அந்த பள்ளியின் ஒவ்வொரு மூலையிலும் அவனது அலறல் ஒலி பட்டு எதிரொலித்தது. சென்ற தீபாவளி அன்று அவனிடம் நான் கூறினேன். நாயில் வாலில் பட்டாசை கட்டாதே, கட்டாதே என்று. எங்கே கேட்டான் அவன். அவனுக்கு என்னை போன்று நம்பிக்கையில்லை. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும என்பதில். வாயில்லா ஜீவன்களிடம் கருணையோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதை இங்கில்லாமல் வேறு எங்கு கற்றுக் கொள்ளப் போகிறான் அவன்.

ரமேஷ் வெளியே வரும் பொழுது 16 வயதினிலே கமலைப் போல நடந்து வந்தான். கணுக்காலில் அடித்துவிட்டார்கள் போல. நான் சிரித்து விடக் கூடாது என்று சபதம் எடுத்துக் கொண்டது வீனாய் போய்விட்டது. ரமேஷ் இனிமேல் என் நண்பனாக இருப்பான என்று தெரியவில்லை.

அடுத்ததாக சிவா அழைக்கப்பட்டான். அவன் என்னை திரும்பி சந்தேகமாகப் பார்த்தான். அந்த கண்களில் தூரதேச கடற்பயணம் மேற்கொள்பவனின் துயரக் காட்சி தெரிந்தது. இதுவரை அடித்ததில் அந்த பிரம்பு உடைந்து போயிருந்தது. புதிதாக கொண்டுவரப்பட்ட பிரம்பில் திரு. தர்மராஜின் ஆணைப்படி விளக்கெண்ணை தடவப்பட்டுக் கொண்டிருந்தது. கறிக்கடைக்காரன் ஆட்டை வெட்டுவதற்கு முன் தனது கத்தியை கூர்தீட்டுவான். அதை அந்த ஆடு பார்த்துகொண்டிருக்கும். அதை போன்றதொரு பெரும் பேற்றை சிவா பெற்றிருந்தான். அவனது உடலெல்லாம் சில்லிட்டு போய்விட்டது. கண்களில் கண்ணீர் திரண்டு நின்றது. தர்மராஜ் என்ற கொலைவெறியனை அவன் சந்திக்க தயாரானான். சிவா தனது தந்திர திட்டத்தை மீண்டும் ஒருமுறை நியாபகப்படுத்திக் கொண்டான். அதுதான் அவனது ஒரே வழி. ஒரே தாரக மந்திரம். அது.......... கத்த வேண்டும். தொண்டை கிழிய கத்த வேண்டும் எதிரிகள் மிரண்டு போகும்வரை கத்த வேண்டும். அவ்வளவுதான் நிச்சயம் உயிர் பிழைக்க வாய்ப்புண்டு.

தமிழகததின் பாரம்பரிய கலைகளுள் ஒன்றான சிலம்பத்தில் சிறப்பான வகையில் தேர்ச்சியடைந்திருந்த திரு. தர்மராஜ், தனது மிகையான தகுதியை சிவாவிடம் நிரூபித்துக் கொண்டிருந்தார் என்று சொன்னால் அது மிகையில்லை. சிவாவும் அச்சமின்றி தனது குரல் வலிமையை உலக்குக்கு நிரூபித்துக் காட்டினான். ஹிட்லரின் வதை முகாமில் எது போன்றதொரு காட்சி அறங்கேறியிருக்கும் என்கிற கற்பனைக்கு நிஜ உருவம் கொடுத்துக் கொண்டிருந்தார் திரு. தர்மராஜ். 20 நிமிட போர் ஒத்திகையை முடித்துக் கொண்டு சத்தியமாக உயிருடன் வந்து கொண்டிருந்தான். சாத்தியமில்லை தான் இருப்பினும் அது உண்மை. அவன் தர்மராஜ் எனும் கொலை வெறியனின் தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்து வந்து கொண்டிருந்தான்.

அடுத்ததாக சிறப்புமிக்க நான் அழைக்கப்பட்டேன். எனக்குத் தோன்றவில்லை. எனது பழிவாங்கும் படலத்தை அவர்கள் முடுக்கிவிடுவார்கள் என்று. பதிலுக்கு பதில் என்று அது போய்க்கொண்டே இருக்கும் போல.

உள்ளே சென்றபின் தான் தெரிந்தது. அவர்கள் இருவர் அல்ல மூவர் என்பது. ரவீந்திரனும் இணைந்து கொண்டு இவ்வளவு நேரம் மும்முனைத் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். அய்யோ நான் எவ்வளவு பெரிய தவறு செய்ய இருந்தேன். அந்த ரவீந்திரனை மன்னித்துவிடலாம் என்றல்லவா இருந்தேன்.

என் மேல் அவர்கள் மூவருமாக இணைந்து நட்த்திய தாக்குதல்களையும், அவர்கள் செய்த கொடுஞ்செயல்களையும் நான் சொல்லப் போவதில்லை. அது எனது தன் மானத்தை பாதிக்கக் கூடிய விஷயங்கள். சிறுவர்களை பொறுத்தவரை தன்மானமில்லாதவர்கள் என்று நினைப்பீர்களேயானால் நான் அதற்கு எதிரானவன். அவர்கள என்னை அடித்தார்கள். கேவலப்படுத்தினார்கள். இடையிடையே ஏதோ கேள்வி கேட்டார்கள். என்னிடம் மிகமிக அசிங்கமாக, மனிதத் தன்மையற்று நடந்து கொண்டார்கள். அநத ரவீந்தரனுக்குள் இவ்வளவு நாளாக ஒரு ஓல்டுமங்க் குடித்த கொரில்லா குரங்கு இருப்பது தெரியாமலே போய்விட்டது எனக்கு.

எனக்கு இப்பொழுது தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஒரு விஷயம உண்டு. அது, ஒரு ஹீரோகோண்டா பைக்கில் பிரேக் ஒயர் எங்கு இருக்கும் என்பதுதான். வாய்ப்பு கிடைத்தால் எல்லோரும் தங்கள் கொடூரத் தன்மையை காட்ட விரும்புகிறார்கள். அந்த ரவீந்திரன் மட்டும் என்ன மகாத்மாவை போலவா நடந்து கொள்ளப் போகிறார். பாடம் கற்பிப்பது என்று வந்துவிட்டால் யாராய் இருந்தால் தான் என்ன?. சிலர் தங்களது மோசமான பழக்க வழக்கங்களை மோசமாக பாதிக்கப்பட்ட பின்தான் கைவிடுவார்கள். 20, 22 வயதில் விட்டிருக்க வேண்டிய பழக்கம். வண்டியை ஸ்டார்ட் செய்தவுடன் ஆக்ஸிலேட்டரை முழுவதுமாக திருகிக் கொண்டு வேகமாக செல்லுவது என்பது இந்த 35 வயதில் அப்படி ஒன்றும் நல்ல பழக்கம் இல்லையே?. திரு. ரவீந்தரனுக்கு சில நல்ல பழக்க வழக்கங்களை சொல்லிக் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. என்று நினைக்கிறேன்.

அந்த பிரேக் ஒயர் அப்படி ஒன்றும் கடினமாக இலலை. குறைந்த பட்சம் ஒரு சாக்கடையில் விழுந்து எழுவாரேயானால், அது எனக்கு போதுமானது. இதில் எனக்கொன்றும் பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை. ஒரு பிரம்பால் அரைக்குள் ஓடவிட்டு அடிக்க கூடிய வாய்ப்பு எனக்கும் கிடைக்குமானால், நானும் அவ்வாறே திருப்தியடைந்து கொள்வேன். அந்த பெரிய மனிதர்களைப் போல் அல்லாமல் சற்று இரக்க சிந்தனையுடனும், மன்னிக்கும் தன்மையுடனும் நடந்து கொள்வேன். சிறிது வயது முதிர்வால் செய்யும் செயலில் ஏதேனும் புனிதம் வந்து ஒட்டிக் கொள்ளுமா? நியாயம், சரி என்பதெல்லாம் எந்த வயதினரானாலும் ஒன்றாகத்தானே இருக்க வேண்டும். இந்த விஷயங்களில் ஏதேனும் புதிய இலக்கணம் வகுக்கப்பட்டிருக்கிறதா?

ஒருவித சரவாதிகாரத் தன்மையோடு நாங்கள் செய்வதுதான் சரி என்கிற தோரணையில், தங்கள் பதவி மற்றும் அதிகாரத்தில் துணையோடு, அதுவும் எதிர்த்து தாக்க துணிவோ? சக்தியோ? இல்லாத சிறுவர்களிடம் தங்களது சொந்த பழிவாங்கும் செயலை நிறைவேற்றும் அசிங்கத்தை யார்தான் கவனிக்கிறார்கள். நாங்கள் புனித மகாத்மாக்கள், நேர்மையின் சிகரங்கள், கல்வி கற்பிக்கும் உயரிய தொழிலை மேற்கொண்டிருப்பவர்கள் போன்ற சற்றும் பொருத்தமில்லாத, போலியான முகமூடிகளை போட்டுக் கொண்டு சமுதாயத்தில் தாங்கள் மிக நல்லவர்கள் என்கிற தோரணையோடு முகத்தை வைத்துக் கொண்டு வலம் வரும் இவர்களின் உண்மையான உள் கொடூரங்களைப் பற்றி யார் புரிந்து கொள்கிறார்கள். குறைந்தபட்சம் ஒரு பாதிக்கப்பட்டவனின் புலம்பல்கள் கூட வன்மையாக கண்டிக்கத்தக்க, சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒருவித அஜீரணமான விஷயமாகவே இருக்கிறது.

சிறுவர்கள் அடங்கிவாழ கற்றுக்கொள்ள வேண்டும். மரியாதை என்கிற பதத்திற்கு இவன்தான் பொருள் என்பது போல் நடந்து கொள்ள வேண்டும். சற்றும் சகிக்க முடியாத, மற்றும் புரிந்து கொள்ளவே முடியாத இந்த கொள்கையை (விரும்பாவிட்டாலும்) ஏற்றுக் கொள்பவனாக, அதாவது ஒரு ஆசிரியர் உஙகளை அடிப்பாரேயானால் அது உங்கள் நன்மைக்கே, உங்களை வாய்க்கு வந்தபடி திட்டுவாரேயானால் அதுவும் உங்கள் நன்மைக்கே, அவரின் வன்முறைகள் எல்லாம் உங்கள் நன்மைக்கே என்கிற நவீன கொள்கை இருக்கிறதே. நான் அரசியலை வேறு எங்கு போய் கற்றுக் கொள்ள வேண்டும். இது ஒரு அழகான அரசியல் சாணக்கியத்தனம். ஒரு பிற்கால அரசியல்வாதிக்கு மிகவும் உதவக்கூடிய விஷயம். உன் வன்முறைகளுக்கும், நேர்மையற்ற தன்மைக்கும் சாயம் பூசிவிடு. ஆம் மிகச் சிறந்த வார்த்தைகள். மக்கள் ஏமாந்து விடுவார்கள். அவர்கள் வேறு எதற்குத்தான் இருக்கிறார்கள். சிறிது ஏமாற்றவாவது பயன்படுகிறார்களே. அவர்கள் ஆழ் மனதுள் இதைப் பதிய வைத்து விடலாம். அதாவது "இவையெல்லாம் உங்கள் நன்மைக்கே" எனது வன்முறைகளெல்லாம் உங்களை காப்பாற்றவே. எனது வக்கிரங்கள் எல்லாம் உங்கள் நல்வாழ்க்கைக்கே. எனது தகாத செயல்கள் எல்லாம் உங்கள் வாழ்க்கையை வளப்படுத்தவே. சாயம் பூசும் கலைதான் எவ்வளவு அழகானது. நான் முட்டாளாக்கப்படுவதை, என்னையே விரும்பி ஏற்றுக் கொள்ளச்செய்யும் அருமையான கலை. என்னை பொருத்தவரை இது வன்முறையின் உச்சம். அதுவும் சிறுவர்களிடம் இது மிக அதிகம்.

இதுவும் ஒருவித ரேக்கிங்கே. கல்லூரியில் முதலாமாண்டு மாணவனை மூன்றாமாண்டு மாணவன் தனது வன்முறை செயல்கள் மூலம் ஆக்கிரமிக்க முயலும் செயலுக்கும், ஒரு உத்தம ஆசிரியரின் இது போன்ற செயலுக்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் கல்லூரி மாணவர்கள் மட்டும் தனியாக தண்டிக்கப்படுகிறார்கள். ஆம் நானும் இவ்வாறு ஏக்கம் கொள்ள செய்யப்படுகிறேன். நானும் ஒரு ஆசிரியரைப் போல, ஒரு தலைமையாசிரியரைப் போல, எனது விருப்பப்படி, சுதந்திரமாக, எனது ஈகோவை, பூரணமாக திருப்தி செய்துகொள்வது எப்போது. நானும் எப்பொழுது ஒரு பழிவாங்கும் செயலை சுதந்திரமாக எந்த பயமுமின்றி வௌப்படையாக, அதுவும் இந்த சமுதாயத்தின் முழு ஒப்புதலோடு செய்த கொள்வது. எனக்கு இன்னும் அது போன்றதொரு தகுதி வரவில்லையோ? நானும் அதற்கு ஒரு ஆசிரியராக வேண்டுமோ?

தெளிவாக சொல்லிக் கொள்ளப்பட வேண்டிய விஷயம் இது ஒன்றுதான். எனது பழிவாங்கும் செயலில் எனக்கு எந்தவித தாழ்வு மனப்பான்மையோ? சுய காழ்ப்புணர்ச்சியோ இல்லாமல் இருக்கிறதென்றால் அதற்குரிய உளவியல் காரணங்களை வேறு எங்கும் தேட வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு ஒரு ஆசிரியரே போதுமானவராக இருக்கிறார். அவர் என்னை தாழ்வு மனப்பான்மை கொள்ள விடுவதில்லை. அவர் எனது காழ்ப்புணர்ச்சிகளுக்கு பதில் சொல்லிவிடுகிறார். ஆம் அவர் என்னை பழிவாங்க தூண்டும் எல்லா நியாயமான விஷயங்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார்.

- சூர்யா ljsurya@gmail.com

நன்றி கீற்று, திண்ணை

பழிக்குப் பழி

நாட்டின் அமைதிக்கு பங்கம் விளைவித்த அந்த 3 கொடூரர்களுக்கு உலகின் மிகச் சிரமமான தண்டனை வழங்கப்பட்டிருந்தது. அவர்களுக்கு அது முடியும் என்று தோன்றவில்லை. வெகு சிரமமான அந்தகாரியத்தில் கடந்த ஒரு மணி நேரமாக கட்டாயத்தின் பேரில் ஈடுபட்டிருந்தார்கள். கடவுள் என்று ஒருவர் இருப்பாரேயானால், அவரும் துரதிஷ்டவசமாக நேர்மையானவராக இருப்பாரேயானால் நிச்சயமாக எதிர்காலத்தில் பழி வாங்குவதற்கு ஒரு வாய்ப்பையாவது அளிக்க வேண்டும். கண்ணுக்கு தெரியாத சூட்சமமான வேதனை ஆக்கிரமித்து அழுத்திக் கொண்டிருக்கிறது வெகு நேரமாக. இது மிகப்பெரிய அவமானமும் கூட. இதற்கெல்லாம் ஒரு விடிவு காலம் நிச்சயமாக வரும்.

ஆனால் இந்த சமயத்தில் யாருக்கும் தெரியாமல் நாங்கள் அந்த தண்டனையை மீறிக் கொண்டுதானிருந்தோம். வாயில் விரல் வைத்தபடி நாங்கள் மூவரும் உதடுகளை கூட அசைக்காமல் பேசிக் கொண்டுதானிருந்தோம். அந்த மட ஆசிரியர் நினைத்துக் கொண்டிருக்கிறார். வாயில் வரலை வைத்துக் கொண்டு அமைதியாக மண்டியிட்டிருக்க வேண்டும் என்று கூறிவிட்டால். நாங்கள் அமைதியாக இருந்து விடுவோம் என்று. அவருக்கு எங்கே தெரியப் போகிறது நாங்கள் புதிதாக கண்டுபிடித்திருக்கும் இந்த தொழில் நுட்ப யுக்தி பற்றி. எங்கள் உதடுகள் அசையாது. எங்கள் நாக்கு கூட அசையாது, உதடுகளின் குறுக்கே விரலை வைத்திருப்போம். ஆனால் வார்த்தைகள் வந்து கொண்டுதானிருக்கும், செய்திகள் பரிமாறப்பட்டுக் கொண்டுதான் இருக்கும். இருப்பினும் அவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறோம் என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்ள வேண்டியது எங்கள் கடமை.

கடந்த ஒரு நாளில் நிகழ்ந்த பல விஷயங்களை இங்கே சொல்லியாக வேண்டும். இல்லையெனில் எங்களது ரிவன்சின் நியாயம் புரியாமலே போய்விடும். அந்த ஆசிரியர் எங்களுக்க செய்த அநீதி யாருக்கும் தெரியாமலே போய்விடும்.

நான் ரொம்ப சமத்து அதோடு கூட மிகமிக நல்லவள் என்பது போல முகத்தை வைத்துக் கொண்டு 3 வது பெஞ்சில் 2 வதாக உட்கா‌ர்ந்திருக்கிறாளே சுகுனா, அவள் நேற்று என்ன செய்தாள் தெரியுமா? நாங்கள் மூவரும் அவளது டிபன் பாக்சில் உள்ள் தயிர் சாதத்தைத் திருடித் தின்று விட்டோமாம். அந்த ஊசிப் போன தயிர் சாதத்தை பார்ப்பவர்களால் நிச்சயமாக அப்படி சொல்ல முடியாது. திருடியிருக்கலாம் என்பது வரை ஒத்துக் கொள்ளலாம். ஆனால்அதை திங்க முடியுமா? என்ன? அவள் சொன்ன பொய்க்கு யார் தண்டனை கொடுப்பது. இன்று காலை வந்ததும் வராததுமாக எங்களது திட்டத்தை தீட்டினோம். நான் (சங்கர்) மூக்கை உடைக்கலாம் என்றுதான் கூறினேன். ஆனால் இந்த ஆசிரியர்கள் அதை கொலைக் குற்றமாக்கி தூக்கில் ஏற்றினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. சிவா இந்த ஐடியாவைக் கொடுத்தான். அவள் உட்காரும் இடத்தின் அடியில் காம்பசை சொருகி வைத்து விடுவது என்று. ஆனால் நான் (சங்கர்) அதை கடுமையாக ஆட்சேபித்தேன். காரணம், அந்த தண்டனை ஒருவருக்கு மட்டுமே வழங்கப்பட வேண்டிய தனிச்சிறப்பு வாய்ந்த தண்டனை. வேறு யாருக்கும் அந்த தண்டனையை கொடுத்து, அந்த தண்டனையை அவமதிக்கக் கூடாது. அது ஆசிரியர் பால் பாண்டிக்கு மட்டுமே சொந்தமானது, அதில் யாரும் கைவைக்கக் கூடாது. அந்த அழகான காட்சியை எப்படி விவரிப்பது. அதில் அவர் உட்கார்ந்ததும் துள்ளிக் குதித்து எழும்பி கீழே விழுவாரே என்ன அருமையானதொரு காட்சி அது. தயவு செய்து இதை புரிந்து கொள்ளுங்கள் என்று நான் விளக்கியதும்,அவர்கள் ஒத்துக் கொண்டார்கள். ஆனால் ரமேஷ் கூறிய அந்த தண்டனை மிக அழகானது. அவளது ஒற்றை பக்க ஜடையை கத்தரித்து விடுவது. ஆஹா அருமையான யோசனை.அவள் மொத்தமாக அடங்கி விடுவாள்.அவளது திமிரும அடங்கிவிடும். இனி நம் வழிக்கே அவள் வரமாட்டாள். ரமேஷ் எப்பொழுதுமே புத்திசாலித்தனமாகத்தான் யோசிப்பான். அவனை எங்களுடன் இணைத்துக் கொண்டதற்கு காரணமே அவனது புத்திசாலித்தனம்தான்.

எங்களது திட்டக்குழுவில் ஒரு வழியாக அந்த முடிவு எடுக்கப்பட்டது. காலை ப்ரேயிரின் போது அவளது ஜடையை அறுத்துவிடுவது என்று முடிவு செய்தோம். சிவா அருகில் உள்ள அவனது வீட்டிலிருந்து ஒரு பெரிய கத்தரிக் கோலை எடுத்து வந்தான். ஆனால் அந்த தீரச் செயலை செய்வது யார். என்னை விட தைரியமான மாணவன் வேறு யாரும் இல்லையாம். சிவாதான் கூறினான். அதை எப்படி நான் மறுப்பது. நான் வேறு நிஜமாகவே தைரியமானவனாக இருக்கிறேன். என்ன.......... மாட்டிக் கொண்டால் தூக்கி போட்டிடு மிதிப்பார்கள். அதை நினைத்தால்தான் கால்கள் இரண்டும் லேசாக நடுக்கத்தை பெறுகின்றன. இருப்பினும் நான் என்ன காந்ந்ந்ந்தியா? புத்த்த்த்தரா? இன்னா செய்தாரை மன்னிப்பதற்கு

ப்ரேயர் தொடங்கியது. ஐயோ............ அந்த நாராசமான பாடலை போட்டிடுத் தொலைத்தார்கள். ........."ஒரு தாய் மக்கள் நாம் என்போம்".......... அதை தாங்க முடியாமல் என் உடலுக்குள் என்ன நடந்தது தெரியுமா? .... பித்தநீர் கசப்பாக சுரப்பது போல் அடிநெஞ்சில் சுரந்து பின் மறைந்தது. பல நாட்களாக இந்த ஒரே பாடலை போட்டால் பின் என்ன செய்யும் . தினசரி வாந்தி எடுக்காமல் தப்பிப் பிழைப்பதே பெரும்பாடாக இருக்கிறது. ஆனால் இந்த நல்ல குழந்தைகள் என்று பெயர் எடுத்த சுகுனா போன்ற நடிகைகள் முகத்தை சிரிச்சா மாதிரி வைத்துக் கொண்டு ஒரு போஸ் கொடுப்பார்களே? அதுமிகக் கடினம். அதற்கு மிகுந்ததைரியம் வேண்டும்.அந்த ஒரே விஷயத்துக்காக மட்டுமே நான் அவளை பாராட்டுகிறேன். அவள் கடைசிய வரை முகமூடி அணிந்தது போல் சிரித்த முகத்துடனேயே காணப்பட்டாள்.ஆனால் இன்னும் சிறிது நேரத்தில் அந்த முகத்தின் தன்மையே மாற இருந்தது. நான் பின் வரிசையிலிருந்து மெதுவாக அடிமேல் அடி வைத்து அவளை நெருங்கினேன். என்ன அழகாக சிரித்துக்கொண்டிருந்தாள் தெரியுமா? அவளுக்கே தெரியாமல் அவளது இரட்டை ஜடையை ஒற்றை ஜடையாக்கினேன். அவள் இன்னும் கவனிக்கவில்லை. ஆனால். பின்னே நின்று கொண்டிருந்த கீதா (அவளது தோழி) போட்டுக் கொடுத்து விட்டாள். அப்பொழுது கத்த ஆரம்பித்தவள் தான். அடிவயிற்றிலிருந்து தம் கட்டி 8 கட்டையில் சுருதி சுத்தமாக ஒரு நூறு பர்லாங்கு தூரத்திற்கு கேட்கும் அளவுக்கு வெறித்தனமாக கத்தினாள். கத்தியவள் கத்தியதோடு சும்மா விட்டாளா. கீழே படுத்து கொண்டு அந்தப் பக்கம் 4 முறை, இந்தப்பக்கம் 4 முறை என அங்கப்பிரதட்ஷணம் செய்வது போல உருள ஆரம்பித்துவிட்டாள். ஏதோ பாம்பு கடித்து விட்டதோ என பயந்து போன ஆசிரியர்கள் ஓடி வந்து அவளை தூக்கினார்கள். அது ஏன் அழும் பொழுது கால்கள் இரண்டையும் நீச்சல் அடிப்பது போல் உதைக்கிறாள் என்றுதான் புரியவில்லை.

அவளது ஷேவிங் செய்யப்பட்ட ஒருபக்க தலையை பார்த்தவுடனே புரிந்து விட்டது நிலைமை. ஹு இஸ் திஸ் புரூட்டஸ் என்று பால்பாண்டி வெறித்தனமாக கத்தினார். அவர் ஆங்கில ஆசிரியராம். யாருக்கு புரிகிறதென்று அவர் இவ்வாறெல்லாம் கத்துகிறார் என்றதான் தெரியவில்லை. இப்படித்தான் அவர் ஒவ்வொரு முறையும் எனது கோபத்திற்கு இலக்காகிப் போகிறார். நானும் அவரது பின்பாகத்தை எத்தனை முறைதான் பஞ்சர் செய்வது. அவருக்கு புததி வருவதே இல்லை. அதற்குள்ளாக அந்த கீதா வேகமாக என்னை நோக்கி கையை காட்டி விட்டாள்.

பின் தேர்ட் டிகிரி பாணியில் நடத்தப்பட்ட விசாரணையில், திட்டக்குழுவில் பங்கேற்ற மூவர் வரை மாட்டிக் கொண்டோம். எதிரி நாட்டு ராணுவத்திடம் மாட்டிக் கொண்ட அகதியைப் போல ஆகிப் போனது எங்களது நிலைமை. வற்றாத ஜீவநதியைப் போல சுகுனாவின் கண்களிலிருந்து கண்ணீர் சுரந்து கொண்டிருந்தது. ஒரு வேளை அவள் இவ்வாறு நினைத்துக் கொண்டிருக்காலாம். தன் கண்ணில் கண்ணீர் இருக்கும்வரதான். இவர்கள் மூவரும் அடிபட்டுக் கொண்டிருப்பார்கள் என்று. கடந்த 3 மணி நேரமாக தேம்பி, தேம்பி அழுது கொண்டிருந்தாள். ஆனால் திட்டக் குழுவில் எப்பொழுது முடிவெடுக்கப்பட்டதோ அப்பொழுதே உடம்பை இரும்பாக்கிக் கொண்டுதான் செயலில் இறங்கினேன் நான்.

ஒரு பொது நலனுக்காக தியாகம் செய்வது என்று வந்துவிட்டால் வாய்க்கரிசி போட்டுக்கொண்டு செயலில் இறங்கிவிடவேண்டும் என்பது வீரர்களின் பொதுமொழி. அடி கொடுப்பதைவிட அடி வாங்குவதுதான் உண்மையான வீரம் என்று எம்.கே. காந்தி என்பவர் சொல்லியிருக்கிறாராமே. அவர் பிறந்த நாட்டில் பிறந்துவிட்டு நான் மட்டும் எப்படி வேறு விதமாக இருக்க முடியும். பெற்றுக் கொண்டிருக்கும் தண்டனைக்கு ஈடானது, செய்த செயலின் மகிழ்ச்சி.இரண்டும் ஒன்றையொன்று சமன் செய்து கொள்ளும். ஆனால், இந்த பால்பாண்டி ஏன் வானத்துக்கும், பூமிக்குமாக குதித்தார் என்றுதான் புரியவில்லை.

ஒற்றை பக்க ஜடை இல்லையென்றால் அப்படி என்ன ஆகிவிடப் போகிறது.. சாமிக்கு முடியெடுத்தா; புண்ணியம் என்கிறார்கள். அதே முடியை நான் எடுத்துவிட்டால். மடத்தனமாக கத்துகிறார்கள். ஒரு புரிதலே இல்லாமல் நடந்து கொள்வது இந்தியர்களின் வழக்கம்தான். என்ன செய்வது படிப்பு முடிந்ததும் அமெரிக்கா சென்றுவிட வேண்டும்.

தண்டனை கொடுக்கிறேன் என்கிற பெயரில், காதைப் பிடித்து திருகும் பழைய பழக்க வழக்கத்தை குழி தோண்டி புதைக்க வேண்டும் என்பது என் கருத்து. காரணம் வலி ஒரு பிரச்சனை அல்ல. ரேடியோவுக்கு வால்யூம் ஏற்றுவது போல் கன்னாவின்னாவென காதை பிடித்து திருகிக் கொண்டு சரமாரியாக கேள்வி கேட்கிறார்கள். எப்படி அந்தகாதில் கேட்கும் அவர்களது கேள்விகள். பதில் சொல்வில்லையென்றால் கண்ணத்தில் வேறு அறைகிறார் அந்த பால்பாண்டி. இந்த மடத்தன்ஙகளையெல்லாம் சகித்துக் கொள்ள முடியாமல்தான் பால்பாண்டி அவர்களுக்கு காம்பஸ் வைத்தியம் செய்ய வேண்டியதிருக்கிறது. அவர் என் காதை பிடித்து திருகிக் கொண்டு கேட்கிறார்.

"ஏண்டா இந்த பச்ச குழந்தையோட தலைமுடிய கட் பண்ண"

இந்த நகைச்சுவை கேட்டு நான் சிரிக்காமல் இருந்தது பெரிய விஷயம். அதோடு மட்டுமில்லாமல் அவருக்கு இவ்வளவு நகைச்சுவை உணர்வு இருப்பது எனக்கு இப்பொழுதுதான் தெரிய வந்தது. படைப்பின் விநோதத்தைத்தான் என்னவென்று சொல்வது. பால்பாண்டியிடம் நகைச்சுவை. அதில் முதல் நகைச்சுவை என்னவெனில், முதலில் அது மிகப்பெரிய தவறும் கூட. சுகுனா ஒரு பச்சை குழந்தையாம், இந்த உலகில் எங்கு தேடினாலும் கிடைக்க மாட்டார்கள், தான் பழி வாங்க நினைக்கும் ஒருவனை காயப்படுத்துவதற்காக, தொடர்ச்சியாக 3 மணி நேரம் தன்னை கட்டாயப்படுத்திக் கொண்டு அழும் ஒரு பெண்ணை - அப்படிப்பட்ட ஒரு விநயம் மிகுந்த ஒரு குட்டி பிசாசை எப்படி பச்சை குழந்தை என்று சொல்லலாம் அந்த பால்பாண்டி. அவரை மன்னித்து விடுவதற்கு ஒரே ஒரு வலிமையான காரணமுண்டு. அது அவரது தலைமேல் உள்ள தரிசு நிலம். அவருக்குத் தான் தெரியும். அவ்வளவு நீள தலைமுடியின் அருமை. அவரது மனக்குமுறலும், என் மீதான வெறித்தாக்குதல்களும் ஒரு வித ஆதங்க மனோபாவம் தான் காரணம் என்பதால் அவரை மன்னித்து விடுமாறு என் உள்மனம் கூறியது.

ஆனால் தலைமையாசிரியர் என்று ஒருவர் இருக்கிறாரே. அவருக்கு தர்மராஸ் என்று தவறாக பெயர் வைத்துவிட்டார்கள். அவர் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு தவறான புரிதலிலேயே வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் ஒருமண்டி விளக்கெண்ணைய் தடவிய பிரம்பிற்கும், மாணவர்களின் ஒழுக்கத்திற்கும் ஏதோ சம்பந்தம் இருப்பதாக வெகு நாட்களாக தவறாக புரிந்து கொண்டே வாழ்ந்து வருகிறார். ஏதேனும் பிரச்சனை என்று வந்துவிட்டால் அவ்வளவுதான். மாட்டுக்காரன் குச்சியை எடுத்துக் கொண்டு ஓடி வருவதைப் போல. குதித்தோடி வந்து பிரம்பை சுற்றி சுறறி அடிப்பார். பின் நிதானமடைந்தவராய் என்ன நடந்தது என்று விசாரிப்பார். எனது வாழ்க்கை லட்சியங்களுள் இதுவும் ஒன்று. பயன்படுத்தப்படாத திரு. தர்மராஜின் மூளையை கடினமான கற்களைக்கொண்டு தட்டி வெளியேற்ற வேண்டும் என்று. அவருடைய பரிதாபமான மூளைக்காக இதை நான் சங்கடமின்றி செய்வேன்.

அந்த மேன்மை மிகுந்த மனிதர். என் பின்புறத்தில் தாக்கியதில் 7 ரத்தசிவப்பு வரிகள். இதை நான் வாழ்க்கை முழுவதும் மறக்கமாட்டேன் என்று மானசீகமாக அவருக்கு உறுதி கொடுத்து விட்டேன். ஒரு வெட்டப்பட்ட முடிக்கு இவ்வளவு பெரிய கொலைவெறித்தல்கள் அவசியமே இல்லையென்று யாருக்குமே அங்கு தோன்றவில்லை. ஆனால், நடுநிலைமை வாய்ந்த ஒருமனிதர் கூட அங்கு இல்லையே. என்ன நடந்தது. ஏன் நடந்தது என்பதை நேர்மையாக விசாரிக்க. கண்ணால் கண்டதையும், காதால் கேட்டதையும் மட்டுமே வைத்து எப்படி இவர்கள் மிகச்சாதாரணமாக இப்படியொரு முடிவுக்கு வர முடிந்தது. இவர்களெல்லாம் சூழ்நிலைக் கைதிகள். தீர விசாரித்து தீர்ப்பளிக்க லாயக்கற்றவர்கள். இவர்கள் நேர்மையின்றி ஒருசார்பாக நடந்து கொண்டதால் எனக்கு நேர்மை மீதே நம்பிக்கை போய்விட்டது. நாளை நான் நேர்மையின்றி ஏதேனும் ஒரு சூழ்நிலையில் நடந்து கொண்டால் அதற்கு இன்று நிகழ்ந்த இந்த நிகழ்ச்சியே காரணமாக இருக்கும்.

ஒரு வழியாக அவள் அடங்கினாள். அந்த ஆசிரியப் பேய்களும் தங்களது வீர சாகச விளையாட்டுக்களை நிறுத்தியிருந்தார்கள். இத்தனைக்கும் பிறகும் நான் அழவில்லை. ஆனால், சிவாவும், ரமேசும் அரைலிட்டர் அளவிற்கு அழுதிருந்தார்கள். இந்த பள்ளியில் ஒரு பிரச்சனை நடந்து அதற்குத் தண்டனையாக வெயிலில், சுடுமணலில் மண்டி போட வைக்க வில்லை என்றால். அவர்களுக்கு தின்கிற உணவு செரிமானம் ஆகாது. அப்பொழுது ஒரு ஆசிரியர் இவ்வாறு கூறியிருந்தார். அவர் பெயர் ரவீந்தரன்.

"இவனுகளயெல்லாம் உப்பு கொட்டி அது மேல மண்டி போட வைக்கணும்"

அவரை பார்த்து வைத்துக் கொண்டேன். அவரைப் பற்றிய விவரங்களை சேகரிக்க வேண்டும் என்று முடிவு செய்து கொண்டேன்.அவர் சமீபத்தில்தான் புதிதாக ஒரு ஹீரோ ஹோண்டாவை வாங்கியிருந்தார். அவர் வேறு நடிகர் விஸயை போல தலைமுடியை வாரியிருந்தார். எனக்கு நிறைய தோன்றுகிறது. ஆனால் ஒன்னொன்னாகத்தானே செய்ய முடியும்.

மண்டியிட்டிருக்கும்பொழுது ரமேஷ் இந்தரசகியத்தை என்னிடம், குரலைத் தாழ்த்திக் கொண்டு மகூறினான். எங்களுக்கு வேறு போரடித்துப் போய்விட்டது. அதனால் பேசத் தொடங்கியிருந்தோம். அந்த மட ஆசிரியர் வாயில் விரலை வைத்துக்கொண்டு அமைதியாக இருக்க வேண்டும் என்று மிரட்டியிருந்தார்.

(இதுதான் இதுவரை நடந்து போன ப்ளாஷ்பேக்)

ரமேஷ் கூறிய அநத விஷயம் எனக்கு புதிது. நான் இதுவரை யோசித்து பார்த்தது கூட கிடையாது. அவன் கூறினான், ஆசிரியர் அடித்ததுமு; கதறித்துடித்து, அழ வேண்டுமாம். வாங்கிய அடியின் மூலம் எவ்வளவு வலிக்கிறது என்பதை, குரல்வளை தெறிக்க கத்தி கதறுவதன் மூலம் வெளிப்படுத்த வேண்டுமாம். அவ்வளவுதான் விஷயம் அந்த ஆசிரியர் மிரண்டுவிடுவார். தான் ஏதோ மிதமிஞ்சிய காரியத்தை செய்துவிட்டோமோ? என்று வருத்தப்படுவார். பின் அவர் பிரம்பை ஓங்கும் பொழுதே அவரது வேகம் குறைந்துவிடும். அவரது மனநிலை சீர்குலைந்துவிடும். அதனால் தான் நாங்கள் இருவரும் அவ்வளவு கதறித்துடித்து அழுதோம், ஆனால், நீயோ அழவில்லை. அதனால் உனக்கு வலிக்க வில்லை என்று நினைத்துவிட்டார் அந்த பால்பாண்டி. சில சமயங்களில் நடிப்பதில் எந்த தவறும் இல்லை என்று கூறுகிறான்.

எனது வருத்தம் அது இல்லை. உள்ளிருந்து சிரித்துக்கொண்டிருக்கிறாளே அந்த சுகுனா, ஏதோ சாதனை செய்துவிட்டது போல. அவள் சந்தோஷப்படும் விதமாக அவள் முன்னாள், அதுவும் கூலிப்படை அடியாள் போன்றிருக்கும் பால்பாண்டியிடம்அடி வாங்கியதைத்தான் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இந்த ஒற்றைப்பக்க தலையை வைத்துக் கொண்டு இவ்வளவு அலப்பறையை கொடுக்கும் அவளுக்கு ஏதேனும் ஒரு வகையில் சிறப்புத் தண்டனை கொடுக்க வேண்டும் என்கிற எனது ஆர்வம் எல்லை கடந்து போய் கொண்டிருந்தது.

வெகு நேரமாக வெயிலில் முட்டி போட்டுக் கொண்டிருந்தோம். லேசாக மயக்கம் வருவது போல் இருந்தது எனக்கு. காரணம் வெயில் அல்ல. அந்த பக்கமாக சென்று கொண்டிருந்த ஆசிரியர் அழகுமலை கூறிய வார்த்தைகள்தான்.

அழகுமலை : எவ்வளவு நேரமா மொண்டி போட்டிருக்கீங்க

ரமேஷ் : 4 மணி நேரம்மா சார்.

அழகுமலை: பரவால்ல, மாலை வெயில் உடம்புக்கு நல்லது, கீப் இட் அப்

நிச்சயமாக நல்லது தான். நானும் ஒத்துக் கொள்வேன். எப்பொழுதெனில் அந்த அழகுமலையை அரை நிர்வாணமாக்கி, ஒரு மணி வெயிலில் உட்கார வைக்கும் பொழுது. அலட்டிக் கொள்ளாமல் பொன் மொழிகளை உதித்துவிட்டு செல்லும் பாங்கு தமிழ்நாட்டுக்கே உரிய தனித்தன்மையானதுதான். ஆனால், அதை கேட்பவர் கேட்டுக்கொண்டு கேனத்தனமாக சிரிக்க வேண்டும் என்பதை எத்தனை பேர்தான் சகித்துக் கொள்ள முடியும். ஒரு ஒற்றை வார்த்தை மயக்கமுறச் செய்யமுடியும் என்றால் அவரது திறமையைத்தான் என்ன வென்று சொல்வது.

ஆனால் ஆசிரியர் அழகுமலை பரிதாபமானவர். சென்றவருடம் அவர்தான் எனது வகுப்பு ஆசிரியர். அவரது அறியாமை நிறைந்த வார்த்தைகளால் பல்வேறு வகையான விழுப்புண்களை பரிசாகப் பெற்றவர். ஆனா; இன்றுவரை அவருக்குத் தெரியாது. அதற்கெல்லாம் காரணம் நான்தான் என்று. அவர் ஒரு இன்னொசென்ட். தான் என்ன பேசுகிறோம் என்பதை அறியாதவர். கடவுளே அவரை மன்னித்துவிடு, நானும் மன்னித்துவிட்டேன். சென்ற வருடம் நாங்கள் அதி திறமையுடன் செயல்பட்டோம். ஆனால் இந்த வருடம் தான் எங்களது திறமை மங்கிவிட்டது.

பரிதாபப்பட்டு என்று சொல்ல முடியாது. ஆனால் வெயிலில் மய்ஙகி விழுந்து சிறுவர் கொடுமைச் சட்டத்தில் சிக்கிக்கொள்ளக் கூடாது. என்று நினைத்தார்களோ என்னவோ? எங்களை வகுப்பறைக்குள் அனுமதித்தார் ஆசிரியர். நிழலுக்கு வந்ததும் எனது மூளை சுறுசுறுப்படைந்தது. என்னா; கடடுப்படுத்த முடியவில்லை பழிவாங்கும் எண்ணத்தை. திட்டங்கள் ஆழ்மனதுள் தன்னிச்சையாக தீட்டப்பட்டுக் கொண்டிருந்தன. (நானெல்லாம் அப்படியில்லை, நானெல்லாம் அன்பில் தோய்த்தெடுக்கப்பட்ட ஆத்மா என உறுதியாக நம்புபவர்களுக்கு மட்டுமே ஆட்சேபிக்க உரிமை உண்டு)

எனது பழிவாங்கும் படலத்தின் முதல் கட்டமாக எனது நோட்டின் கடைசிப் பக்கத்தில் எழுத ஆரம்பித்தேன்.

1) சுகுனா அலைஸ் நாடகக்காரி

2) பால்பாண்டி அலைஸ் ஹிட்லர்

3) தர்மராஜ் அலைஸ் காதுகேளாதோர் சங்க உறுப்பினர்
(காரணம் , முதலில் தண்டனை கொடுத்து விட்டு பின்னர் விஷயம் என்னவென்று கேட்பவருக்கு காது இருந்து தான் என்ன பிரயோஜனம்)

4)அழகுமலை அலைஸ் இன்னோசென்ட் மங்கி
(எனக்கு விருப்பம் இல்லைதான் இருப்பினும் ஆசையாய் உள்ளது.)

5) கீதா அலைஸ் பொம்பள எட்டப்பன் ஆர் எட்டப்பி

6) ரவீந்திரன் அலைஸ் உப்பு வியாபாரி
(இவருக்கு போனஸ் தண்டனை வழங்க வேண்டும் என்பது எனது சிறப்பு விருப்பம்)

சாக்கடைப் பள்ளத்தில் சுகுணா

நாற்றத்தைப் பற்றி உலகின் சிறந்த தத்துவ ஞானிகளால் ஆயிரம் பக்கங்களுக்கு விளக்கப்பட்ட ஒருபுத்தகத்தை (ஒருவேளை இருந்தால்) தலை கீழாக புரட்டிப் படித்து தெளிந்த ஒருவர் இன்னும் அதிகமாக அதைப்பற்றி தெரிந்து கொள்ள விரும்புவாரேயானால், எங்கள் பள்ளி அருகே உள்ள அந்த சாக்கடைக்கு வந்தால் போதும். அவர் 7 ஜென்மங்களுக்கும் சேர்ந்தாற் போல் புரிந்து கொள்வார் நாற்றத்தைப் பற்றி. அப்படி ஒரு நாற்றம். இப்படியொரு நாற்றம் மிகுந்த சாக்கடையை பொறுத்து கொண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் எங்கள் பள்ளிக்கு ஜனாதிபதியாக பார்த்து ஏதேனும் விருது கொடுக்கலாம். ஆனால் இங்குதான் தகுதிகள் அங்கீகரிக்கப்படுவதே இல்லையே.

அன்று ஒருநாள் அந்த வழியாக நடந்து சென்று கொண்டிருந்த பொழுதுதான் எனக்கு இந்த சிந்தனை தோன்றியது. சுகுனாவை அதற்குள் தள்ளிவிட்டால் என்ன? நினைக்கும் பொழுதே சந்தோஷம் என்ற வார்த்தையின் அர்த்தம் உணர்ந்தேன். ஆனால்அவள், தனக்கு இப்படியொரு அநியாயத்தை செய்வது யார் என்பதை மட்டும் கண்டுகொண்டு விட்டால் அவ்வளவுதான். அவள் ஒரு பொம்பளை ஷேக்ஸ்பியர். ஒரு குட்டி நாடகத்தை எழுதி,இயக்கி, நடித்து காண்பித்து, சிறந்த நடிகைக்கான ஆஸ்கர் பரிசையும் வாங்கி விடுவாள். ஆகையால் அவள் யாரால் தான் தள்ளப்படுகிறோம் என்பதை அறியாதவளாக இருக்க வேண்டும்.

என்ன செய்வது என கொடூரமாக யோசித்ததில் எனக்கு இந்த வழிதான் புலப்பட்டது. விஷயம் சுலபமாக முடிந்துவிடும் இவ்வாறு செய்துவிட்டால். அதாவது அவளால் பார்க்க முடியாமல் போய்விட வேண்டும் அவளது கண்கள் சிறிது நேரம் தெரியாமல் இருந்துவிட்டால்போதும். ஆனால் நினைக்கவே எனக்கு பயமாகத்தான் இருக்கிறது. அவளது கண்கள் துடித்து விடுமே. மிளகாய் பொடி என்றால் சும்மாவா? எனது பிரார்தனை எல்லாம் இதுதான்.அவளது கண்களுக்கு நிரந்தர பாதிப்பு எதுவும் ஏற்பட்டுவிடக்கூடாது.

அந்த மளிகைக் கடைக்காரரிடம் எனது சந்தேகத்தை கேட்ட பொழுது அவர் என்னை முறைத்துப் பார்த்தார். அந்த பார்வையில் ஒரு மனைவி தன் கணவன் மீது கொண்டுள்ள சந்தேகப்பார்வையின் தெறிநிலை தெரிந்தது. தவறான ஆளிடம் கேட்டுவிட்டோமோ என்ற பயம் வந்து விட்டது எனக்கு. அவர் என்ன கண் மருத்துவரா? இந்த கேள்வியை ஒரு கண் மருத்துவரிடம் அல்லவா கேட்டிருக்க வேண்டும். ஆனால் எனது ரகசியத் திட்டத்தில் ஓட்டை விழுந்து விட்டதோ, அவசரப்பட்டு திட்டத்தை வெளிப்படுத்தி விட்டோமோ? என்கிற பயம் வேறு என்னை தொற்றிக்கொண்டது.

கண்களில் மிளகாய்ப் பொடி விழுந்துவிட்டால் என்ன ஆகும் என்ற கேள்வியை எந்த நம்பிக்கையான ஆளிடம் கேட்டு தெறிந்து கொள்வது. நிச்சயமாக அதை தெரிந்து கொண்டுதான் நிறைவேற்ற வேண்டும் என்கிற உறுதியோடுதான் இருந்தேன். நேற்றுவரை. நேற்று எங்கள் வீட்டு: சமையலறையில் எனது அம்மாவின் கண்களில் மிளகாய் பொடி விழுந்துவிட்டது. சிறிது நேர கதறல், அழுகைக்குப் பின் சகஜ நிலைக்கு வந்துவிட்டார். இதை கடவுளின் சமிஞையாகவே எடுத்துக் கொள்ள வேண்டியதிருக்கிறது. அநத கடவுள் என்னுடைய ஆதரவாளன் என்பதை என்னால் நம்ப முடியவில்லைதான். இருப்பினும் துணிவைப்பற்றி சொல்வதற்கொன்ன. நான் வேறு இயற்கையிலேயே துணிவுள்ளவன்.

"எதிரி என்று வந்துவிட்டால் எதிரிதான். நியாயம் கிடைக்கவில்லையென்றால் பறித்துக் கொள்ள வேண்டியதுதான். யாரிடம் கேட்க வேண்டும். எதற்காக கேட்க வேண்டும். துணிவுள்ளவன் செய்வதுதான் நியாயம்",

எனது சிந்தனை உரமேற்றப்பட்டுக் கொண்டிருந்தது, அவளது வருகைக்கா அந்த மரத்தடியில் வெகு நேரமாக காத்து;க கொண்டிருந்த போது. இன்று ஒரு சரித்திர நிகழ்வு நிகழப் போகிறது. ஒரு திமிர் பிடித்தவிளின் கொட்டம் அடங்கப் போகிறது. இன்னும் சில நிமிடங்கள்தான். நிர்ணயிப்பவர்களுக்கு மட்டுமே இவ்வுலகில் அமைதி கிட்டும். சகித்துக் கொண்டிருக்கும் இந்திய குப்பகைளில் நானும் ஒருவன் அல்ல. நான் தனித்தன்மை வாய்ந்தவன். முடிவெடுப்பேன். நிறைவேற்றுவேன்.

இந்த 2 மாதங்களில் மொட்டையடிக்கப்பட்டிருந்த அவளது தலையில் சிறிது முடி வளர்ந்திருந்தது. நான் எதிர்பார்த்தது போலவே தனியாகவே வந்து கொண்டிருந்தால். அந்த மிளகாய் பொடியை கைகளில் வைத்திருந்த போதே எரிச்கலைக் கொடுத்தது. கடைசி நேரத்தில் எனது முடிவில் லேசான தடுமாற்றம் ஏற்பட்டது. இருப்பினும் நிறைவேற்றுபவர்களுக்கு என்று தனிச்சிறப்பு வாய்ந்த குணம் ஒன்று உண்டு. அது, முடிவென்று ஒன்றை எடுத்துவிட்டால் அவ்வளவுதான், அவர்கள் பேச்சை அவர்களே கேட்கமாட்டார்கள்.

அவள் வந்து கொண்டிருந்தாள். எனக்குள் அப்படியொரு அக்தர் வேகம். மறைவிடத்திலிருந்து மிளகாய் பொடியை வீசியெறிந்தேன். அது காற்றில் பறந்து அவள் கண்களை பதம் பார்த்தது. இனி அடுத்த கட்ட நடவடிக்கை. ஆனால்........... ஆனால்.............. எனக்கு ஏன் புரியாமல் போய்விட்டது. அவள் கத்தினால் அடுத்த மாநிலத்தில் தூங்கிக் கொண்டிருப்பவர்கள் கூட அலறியடித்தபடி எழுந்து தறிகெட்டு ஓடுவார்கள் என்று. அவள் குரல்வளைக்கு அப்படியொரு சக்தி. ஆனால் என்னுள் இருக்கும் அசாதாரணத் திறமை எனக்கே அப்பொழுதுதான் தெரிய வந்தது. நான் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தேன். அவளை சாக்கடையில் தள்ளுவதற்கு நேரம் கூடி வரவில்லை. அவள் இது போன்று கத்தி கொண்டிருக்கும் பொழுது, நான் அவள் அருகில் இருப்பது அவ்வளவு உசிதமான விஷயமாக இருக்காது.

அந்த நேரத்தில் சாலையில் 1500சிசி குதிரை சக்தி திறனுடன், ஒலிம்பிக் ஓட்டப் பந்தய வீரனைப் போல், கண்மூடித்தனமாக (பதற்றத்தில் ஏன் கண்கள் மூடிக் கொள்கின்றன) ஓடிக்கொண்டிருந்தேன். இன்னும் அவள் குரல் என் காதுகளில் கேட்டுக் கொண்டிருந்தது. கடவுளே ஒன்றரை கிலோமீட்டராவது கடந்திருப்பேனே என்பதை ஆச்சரியத்துடன் நினைத்துப் பார்க்கையில் அவளது குரலின் வலிமையை பாராட்டாமல் இருக்க முடியவில்லை.

ஆனால் நேரம் சரியிலலை என்றால் ஒருவன் தப்பி ஓடிதான் என்ன பிரயோஜனம். எங்கள் பள்ளி தலைமையாசரியர் திரு. தர்மராஜ் ஒரு ஜாக்கிசான் ரசிகர் என்பது எனக்கு இதுநாள் வரை தெரியாமல் போய்விட்டது. என்னமாக டைவ் அடித்தார் தெரியுமா?. நான் ஓடி வந்து இடித்த வேகத்தில், ஒரு முழு சுற்று அந்தரத்தில், என்னவொரு லாவகமாக, அதைப் பார்க்க நூறு கண்கள் வேண்டும். ஆனால் மகிழ்ச்சி என்ற ஒரு விஷயம், குதூகலம் என்கிற அந்த ஒரு விஷயம் போர்க்கல பய நிலையிலும் ஏற்படும் என்கிற உண்மையை அப்பொழுதுதான் உணர்ந்தேன். அவர் சமீப காலமாக தனது முக அழகை கூட்டுவதற்காக கருப்பு கூலிங்கிளாசை அணிய ஆரம்பித்திருந்தார். வெயில் பொறுக்க முடியவில்லையாம்.இப்பொழுதான் தெரிகிறது, கருப்பு கண்ணாடி போட்டால் குத்து மதிப்பாகத்தான் அவருக்கு கண் தெரியும் என்று. ஏனென்றால் அந்த நேர் சாலையில் என்னை தாராளமாக தவிர்த்திருக்கலாம் அவர்.

இன்னொரு குறிப்பிடப்பட வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது. அது, அந்த நிமிடத்தில் ...இல்லையில்லை, அந்த நொடியில் எனக்கேற்பட்ட பெருமையுணர்வு. நான் ஒரு இநதியன் என்கிற பெருமையுணர்வு. இந்தியாவில் பிறந்ததற்காக அடிக்கடி நான்பெருமையும், மகிழ்ச்சியும் கொள்ள வேண்டியிருக்கிறது. எப்படி இதையெல்லாம் மறைக்க முடியும். ம்....... திரு. தர்மராஜ் விழுந்த இடம் அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது. இதை நான் புரிந்து கொள்ளவே இல்லை. ஏன்....... ஏன்.......... ஒரு தெருவில் திறந்தவெளி சாக்கடைதான் இருக்க வேண்டுமா? இரண்டு, மூன்று, நான்கு......... இந்தியாவில் அதற்கு மேலும் எதிர்பார்க்கலாம். தடுக்கி விழுந்தால், கடவுளே அது சாக்கடையாக இல்லாமல் இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்ய வேண்டும். கடவுளுக்கு உங்கள் மேல் பிரியம் இருக்கும் பட்சத்தில் உங்களை தரையில் விழ வைக்கலாம். அல்லது அவராலும் முடியாமல் போகலாம். அவரை அநாவசியமாக திட்டக் கூடாது. அப்படிப்பட்டதொரு வேண்டுதலை நிறைவேற்றுவது கடினமான விஷயம் இந்தியாவை பொருத்தவரை. ஆதலால் அவரை கருணையோடு மன்னித்து விடலாம்.

திரு. தர்மராஜ் சாக்கடையில் தனது புனித முழுக்கை நிறைவேற்றிக் கொண்டிருந்த சமயத்தில். எனது மூளையில் அட்ரீனல் கன்னபின்னாவென சுரக்க ஆரம்பித்துவிட்டது. என்னால் இன்னும் வேகமாக ஓட முடிகிறதென்றால், இன்னும் புரிந்து கொள்ளவில்லை உலகம் இந்திய ஓட்டப்பந்தய வீரர்களைப் பற்றி என்றுதான் அர்த்தம்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு

எங்கள் பள்ளியில் விடுமுறை எடுக்க வேண்டுமென்றால் விடுமுறைக் கடிதம் கொடுக்க வேண்டும். அப்படியில்லையென்றால் 2 பிரம்படி. வெட்டித்தனமாக உட்கார்ந்து கடிதம் எழுதிக் கொண்டிருக்க யாருக்குத்தான் நேரம் இருக்கிறது இங்கே. அடிப்பது ஒரு இயந்திரமாக இருந்தால் கணக்கு வைத்துக் கொள்ள வசதியாக இருக்கும். அதனிடம் இவ்வாறு கூறலாம், இன்னும் இரண்டடி சேர்த்துக் கொடு எனக்கு மேலுமொருநாள் விடுமுறை தேவையாய் இருக்கிறது. ஆனால் அடிப்பது ஆசிரியராய் அல்லவா இருக்கிறார். அவர் கோபத்தில் கதறிக் கொண்டே அடிப்பதை பார்க்கும் பொழுது சிறிது பரிதாபம் தோன்றுகிறது. அவருக்கு ஏற்படப் போகும் ரத்தக் கொதிப்பு நோய்க்கு நான் ஆளாகி விடுவேனோ? என்பதை நினைத்துப் பார்க்கையில் தாழ்வு மனப்பான்மையில் மனம் புழுவாய் துடித்துப் போகிறது.

2 நாள் கழித்து என்ன நடந்தது என்பதை தெரிந்து கொள்வதற்காக பள்ளிக்கு வந்தேன். அங்கே துணைத் தலைமையாசிரியர், விடுமுறைக் கடிதம் கொடுக்காதவர்களை அடித்துக் கொண்டிருந்தார். அந்த நீண்ட வரிசையில் நானும் போய் நின்று கொண்டேன். எனது பார்வை எல்லாம் தலைமையாசிரியர் அறையை நோக்கித்தான் இருந்தது. அவரை அங்கு காணோம். சாக்கடைக்குள் விழுந்தமனிதர் எழுந்தாரா என்று கூட பார்க்கவில்லை. பள்ளிக்கு தலைமையாசிரியர் வரவில்லையென்றால், துணைத் தலைமையாசிரியர் தான் பொறுப்பேற்றுக் கொண்டு பிரம்படி கொடுப்பார். இந்த வேண்டாத வேலையை சலிப்பின்றி செய்ய வேறு யாராலும் முடியாது. யார் வருத்தப்படுகிறார்கள், இவர்கள் அடிக்கிறார்களென்று. சலிப்பு தட்டிவிட்டது. இதற்கு வரிசையில் வேறு நிற்க வேண்டும். அரைமணி நேரம் வீணாய் போவதைத் தவிர வேறொன்றும் நடக்கப்போவதில்லை. என்முறை வரும் போது து.த மிகவும் கலைத்து போயிருந்தார். இது தேவையா? என்பது போல் பார்த்தேன். அவர் புரிந்து கொண்டதாய் தெரியவில்லை. வறண்டு போன உதட்டை ஈரப்படுத்திக் கொண்டு இரண்டடி கொடுத்தார். அந்த நிமிடத்தில் கடவுளிடத்தில் பிரார்த்தனை செய்தேன்.

''கடவுளே அவரைக் காப்பாற்று"

சுகுனாவுக்கு என்னவாகியிருக்கும் என்கிற கேள்வி என் மனதை அறித்துக் கொண்டிருந்தது. அவள் இன்னும் பள்ளிக்கு வரவில்லை. தூரத்தில் ரமேசும், சிவாவும் வந்து கொண்டிருந்தார்கள். அவர்களிடம் விசாரித்ததில் இப்படிக் கூறினார்கள்.

சுகுனாவின் முகத்தில் யாரோ ஆசிட் அடித்து விட்டார்களாம். அதனால் அவளது முகம் முழுவதும் வெந்து விட்டதாம். மருத்துவமனையில் அவள் இன்னும் வலி தாங்காமல் கத்திக் கொண்டிருக்கிறாளாம். இரண்டு போலீஸ் காரர்கள் வந்து விசாரித்து விட்டு போனார்களாம். மருத்துவ பரிசோதனையில் அவளது முகத்தில் வீசப்பட்ட ஆசிட் ஸ்பெசலாக ஜெர்மனியில் தயாரிக்கப்பட்டதாம். அதை தீவிரவாதிகள் மட்டும் தான் பயன்படுத்துவார்களாம்.

"ஐயோ!!!!????"

"ஐயோ, நான் தீவிரவாதி இல்லை, நான் சத்தியமா???"

கடைசியாக அவர்கள் இருவரும் சேர்ந்து ஒரே குரலில் கூறினார்கள்

"அவள் உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிறாள்"

எனது இதயத்திலிருந்து சுமார் ஒன்றரை லிட்டர் இரக்கம் சுரந்து விட்டது. பிறகு கழிவிரக்கம், அதோடு சேர்ந்து என்னன்னமோ என் மனதை பிசைந்தெடுத்தது. இங்கிருந்து மன்னிப்பு கேட்டால் அவள் காதுகளுக்கு கேட்குமா? அப்படியே மன்னிப்பு கேட்பதால் அவளது கண்களில் வலி குறையப் போகிறதா என்ன?

ஆனால், இந்த ஜெர்மனி ஆசிட் புதுக்கதையை பற்றி யோசித்துக் கொண்டிருந்த பொது, கண்கள் லேசாக ஈரமாகியிருந்தது. அந்த கண்ணீர்த் துளிகள் நிரம்பிய பார்வையில் யாரை பார்த்தாலும் சுகுணாவை போலவே தெரிந்தது. அதோ தூரத்தில் ஒருபெண், பார்ப்பதற்கு சுகுனாவைப் போலவே தெரிகிறாள். அவள் அருகில் வரவர என்ன ஆச்சரியம், இன்னும் சுகுனாவைப் போலத்தான் தெரிகிறாள். ஒருவேளை கண்களை கசக்கி கொண்டால் வேறு ஒரு பெண்ணாக மாறலாம். ஆனால் சினிமாவில் எல்லாம் பொய் சொல்கிறார்கள். இதெல்லாம் உண்மையில்லை. அவள் சுகுனாவேதான். இது கனவு கூட இல்லை. ஏனென்றால் கில்லினால் வலிக்கிறதே. அவள் கண்கள் நன்றாகத்தான் இருந்தன. அவள் என்னை முறைத்துப் பார்த்துக் கொண்டே சென்றாளே, எனக்கு நன்றாகத் தெரியும் அந்த பார்வையைப் பற்றி.

ஆனால் எனக்கு ஏன் புரியாமல் போய் விட்டது. சிவா, ரமேஷ் இருவரும் சிறந்த கதாசிரியர்கள் என்பது. சல்லவேலை 10 நிமிடத்தில் பெல் அடித்துவிட்டது. இல்லையென்றால் என்னை பின்லேடனோடு சேர்த்தல்லவா கதை கட்டிவிட்டிருப்பார்கள். அவளது பார்வையில் என்னை அடையாளம் கண்டு கொண்ட எந்த அறிகுறியும் இல்லை. சோ என்னுடைய ஆப்பரேஷன் சக்சஸ்.

ஒருவாரம் அமைதயாக கடந்திருந்தது. ஆனால் அமைதியாக நாட்களை கழிப்பது தான் எவ்வளவு கடுமையாக இருக்கிறது. தூக்கம், மயக்கம், மந்தம், அமைதி எல்லாம் ஒன்று போலவே இருக்கிறது. இதற்கு துன்பத்திலேயே உழலாம். துன்பத்திலாவது உணர்ச்சிகளுக்கு ஏதேனும் வேலையிருக்கும். அமைதியில் ஒன்றுமேயில்லை. சிறைக் கூடங்களைப் போன்றிருக்கும் இது போன்ற பள்ளிகளில், என் போன்ற கிளர்ச்சியாளனுக்கு என்னதான் வேலை. எனது கிரியேட்டிவிட்டி சுத்தமாக செத்துவிடும் போல இருந்தது. ஆனால் என்றுமே என் உள்ளத்தை புரிந்து கொண்டவள் அந்த கடவுள்தான். அதெப்படி ஒரு வாரத்திற்கு ஒருவனை நிம்மதியாக விடலாம் என்று யோசித்தாரோ என்னவோ? ஆரம்பித்துவிட்டார் தனது குட்டி கலாட்டாவை

ஒரு வாரத்திற்குப் பின் தலைமையாசிரியர் பள்ளிக்கு வந்திருந்தார். அவரை பார்த்த பொழுது உடலில் சிறிது நிறம் ஏறியிருப்பது தெரிந்தது. கருமை நிறம் இன்னும் கருமையாக மாற முடியும் என்பதை நான் நம்ப மாட்டேன் என்று யாரும் கூறாதீர்கள். நான் சொல்கிறேன் நம்பித்தான் ஆக வேண்டும். அது உண்மைதான். மற்றபடி அவரது உடலில் எந்த விதமான அடியோ, சிராப்புகளோ இல்லை. ஆள் நன்றாகத்தான் இருந்தார். ஆசிரியர்கள் பேசிக் கொண்டதை வைத்து எனக்கு இந்த விஷயம் தெரிய வந்தது. அவர் விஷவாயுவால் தாக்கப்பட்டு ஒரு வாரமாக அரசு மருத்துவமனையில் சிறப்பு பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது. சாக்கடையில் விழுந்ததை மறைத்து எவ்வளவு அழகாக சமாளித்திருக்கிறார் மனிதர்.

அது என்னவிதமான விஷவாயு என்பது எனக்குத்தான் தெரியும். தண்டனைகள் எல்லாம் திருந்துவதற்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. ஆனால் திரு. தர்மராஜின் தலைக்குள் 4 மூலைகளிலும் தேடினாலும் கிடைக்காது அந்த மூளை. மூளையே இல்லாத ஒரு மனிதரை இந்த உலகின் எந்த ஒரு மூலையிலும் தேட வேண்டாம். தர்மராஜ் தனது தேடுதல் வேட்டையை துவங்கியிருந்தார். அவரை சாக்கடையில் தள்ளி விட்டவன். சிகப்பு கலர் சட்டை போட்டிருந்தானாம்.அவர் உடல் டைவ் அடித்துக் கொண்டிருக்கும் பொழுது அதைக் கவனித்தாராம். ஆனால் நான் சிவப்பு கலரில் ஜட்டி கூட போடப் போவதில்லை என்பது அவருக்கு எங்கே தெரியப் போகிறது.

தர்மராஜும், பால்பாண்டியும் இணைந்து அந்த கல்பிரிட்டை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கியிருந்தார்கள். ஆம். எனக்கும் இனி அவன் யாரோதான். பாருங்கள் அவன் எவ்வளவு பெரிய தவறு செய்துவிட்டான். எங்கள் பள்ளி தலைமையாசிரியரையே பிடித்து சாக்கடையில் தள்ளிவிட்டான். எவ்வளவு பெரிய தவறு செய்து விட்டான். அவன் யாரோ ஒரு 3 வது மனிதன். அவனைப் பற்றி இனி எனக்கென்ன கவலை.

பால்பாண்டியும், தர்மராஜும் தங்களிடம் இல்லாத மூளையை இருப்பதாக நம்பி, அதை கசக்கி பிழிந்து, பள்ளியில் சந்தேகப்படும்படியாக 10 பேரை தேர்ந்தெடுத்தார்கள். அந்த 10 பேரில் யாரோ ஒருவன் தான் திரு. தர்மராஜை சாக்கடையில் பிடித்து தள்ளியிருக்க வேண்டும் என உறுதியாக நம்பினார்கள். துரதிஷ்டவசமாக அந்த 10 பேரில் நானும் ஒருவன். சிவாவும், ரமேசும் துணைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்கள். அவர்களுக்கே நன்றாக தெரிநிதிருக்கிறது. அநியாயமாக தண்டிக்கப்பட்ட ஒருவனின் மனம் சும்மா இருக்காது. அது வேதனையில் புரண்டு துடித்துக் கொண்டிருக்கும். அப்படிப்பட்ட மனது தன்னை சமாதானப்படுத்திக் கொள்ள வேண்டுமென்றால் பழி வாங்க துடிக்கும். அப்படி பழி வாங்க துடிக்கும் 10 பேரை குறிப்பாக நாங்கள் 3 பேரை பற்றி அந்த விநயம் மிகுந்தமனிதர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கிறது. சின்னஞ்சிறு வயதில் அதர்மத்தை இது போன்ற அநாகரிகமான விநயம் மிகுந்த மனிதர்களிடமின்றி வேறு யாரிடம் கற்றுக் கொள்ள முடியும்.

மனம் முதிர்ச்சியடையாத சிறுவர்கள் எங்களிடம் பழிவாங்க துடிக்கிற மனம் இருக்கிறதென்றால் அது இயல்பு. நாங்கள் மறைந்திருந்து பழி வாங்க முயற்சிக்கிறோம். ஆனால் இந்த முதிர்ச்சியடைந்த, பக்குவமடைந்த, நியாயத்தையும், நேர்மையையும், நீதியையும் கட்டிக்காத்து தூக்கி சுமக்கிற ஆசிரியர்கள் இருக்கிறார்களே, அவர்களைது பழி வாங்க துடிக்கிற மனதை எந்த கணக்கில் சேர்ப்பது. ஒரு சர்வாதிகார தலைவனைப் போல, தங்களது பழிவாங்கும் செயலை மேடையேற்றி அறங்கேற்றுவார்கள்.

ஒவ்வொரு மாணவனாக தனியறைக்கு அழைத்து சென்று விசாரித்துக் கொண்டிருந்தார்கள். நாங்கள் மூவரும் பின் வரிசையில் அமர்ந்திருந்தோம். சிறிது நேரம் கழித்து சிவா ஏதோ கெட்ட வாடை அடிப்பதாகக் கூறினான். அது வேறொன்றுமில்லை. முன்னாள் உட்கார்ந்திருந்தவன் ஒன்றுக்கு போய்விட்டான். அதோடு கண்ணீர் வேறு உடலெல்லாம் வியர்த்துவிட்டது அவனுக்கு. சைக்கிளுக்கு காற்றடிப்பது போல் மூச்சுவிட்டுக் கொண்டிருந்தான். சுருக்கமாக சொல்வதென்றால் தனது உடலிலுள்ள நீர்ச்சத்தை எல்லாம் வெளியேற்றிக் கொண்டிருந்தான். இது போன்ற மரண அவஸ்தையில் குழந்தைகளை தள்ளுவதுகொடுமையான விஷயமாகும். அதிகாரம் என்ற ஒன்று என் கையில் மட்டும் இருக்குமேயானால் குறைந்த பட்சம் 5 ஆண்டு சிறைத் தண்டனையாவது அளித்திருப்பேன். ஆனால் உலக சரித்திரத்தில் இதுவரை அவ்வாறு நிகழ்ந்ததேயில்லையே. அதிகாரம் எல்லாம் மனசாட்சி இல்லாத அடக்கி ஆள்பவர்களிடம் மட்டும் தானே கொட்டி கிடந்தது.

அவனுக்கு ஆறுதலாக இருக்குமேயென்று அருகிலுள்ள கேனிலிருந்து சிறிது தண்ணீர் பிடித்து கொடுத்தேன். அவன் அதையும் குடித்துவிட்டு உடனே........ அதெப்படி குடித்தவுடன் வெளியேற்றுகிறான் என்பதுதான் புரியாத புதிராக இருந்தது. விசாரணைக்கு உள்ளே சென்றவன் என்னால் இதற்கு மேல் தொண்டை வெடிக்க கதற முடியாது என்பதை பறைசாற்றுவது போல கதறித் துடித்தான்.

அந்த அறைக்குள் குடுகுடுவென ஓடும் சப்தம் கேட்டது. அவனை ஓடவிட்டு துரத்தி துரத்தி அடிகெ;கிறார்கள் என்று நினைக்கிறேன். ஆண்டவன் தன் இறுதித் தீர்ப்பு நாளில் உலகின் கொடூரர்களையெல்லாம் வரிசைப்படுத்தி நிற்க வைப்பாரேயானால், ஹிட்லருக்கு பின்னே நிற்பது தர்மராஜாகாத்தான் இருக்கும். ஏனெனில் முன் இடத்தை பால்பாண்டி விட்டுக் கொடுக்க மாட்டார். அது அவருக்கு மட்டும்தான். எனக்கு மேலுலுகத்தில் ஒரு வேலை கிடைக்கும் என்றால், அந்த வேலையை நரகத்தில் போட்டுத் தருமாறு கெஞ்சிக் கேட்டுக் கொள்வேன் அந்த கடவுளிடம். ஏனெனில், ஒருவேளை மிகப்பெரிய எண்ணெய்ச் சட்டியில் கொடுங்கோலர்களைப் போட்டு வறுத்தெடுக்கும் இடத்தில் தர்மராஜீம், பால்பாண்டியும் வரலாம். எனக்கென்னவோ அந்த நிமிடத்தில் என் கடமையைச் செய்வதுதான் எனக்கு சொர்க்கமாக இருக்கும் என்று தோன்றுகிறது.

15 நிமிடங்களுக்குப் பிறகு

அறையின் உள்ளே இருந்து உயிருடன் அவன் வெளியே வந்து கொண்டிருந்தான். ஆம், அவனை உயிருடன் விட்டு விட்டார்கள். ஏனென்றால் அவன் தவறு செய்யவில்லை என்பது அவர்களது சிறு மூளைக்கு எட்டிவிட்டதாம். அதனால் அவனை விட்டு விட்டார்களாம். என்ன கொடுமை இது. இவர்களுக்கு புரிதல் என்பது இவ்வளவு மந்த வேகத்தில் நடக்கிறது. இப்பொழுது நன்றாக புரிந்துவிட்டது. இந்த 10 பேரையும் விசாரணை என்ற பெயரில் தண்டித்து விட்டால்,அதில் தவறு செய்தவன் எவனோ, அவனும் தண்டிக்கப்பட்டு விடுவான். இதன் மூலம் அவர்களது மனம் நிம்மதியடைந்துவிடும். என்ன ஒரு தந்திரம். என்ன ஒரு குள்ளநரித்தனம். ஓ....கடவுளே, குள்ளநரியிடம் வேறு நான் மன்னிப்பு கேட்க வேண்டும். குள்ளநரியுடன் இவர்களை ஒப்பிட்டு பேசி, குள்ளநரியை அசிங்கப்படுத்திவிட்டேனே. இது சத்தியமாக நியாயமே இல்லை. தவறிழைக்காத அப்பாவிகள் எல்லாம் தண்டிக்கப்படுவார்களே. என்னை ஒரு செகுவேராவாக மாற்றாமல் விட மாட்டார்கள் போல இவர்கள். இவர்களுக்கு பாடம் கற்பிக்க என் மணம் துடிக்கிறது. ஆனால், சத்ரியனாக இருப்பதைவிட சாணக்கியனாக இருப்பதே சிறந்தது என்பதை நினைத்து என்னை கட்டுப்படுத்திக் கொண்டேன்.

இரண்டாவதாக உட்கார்ந்திருந்தவனை உள்ளே அழைத்தார்கள். அதுவரை மயக்கம் போடாமல் நிமிர்ந்து உட்கார்ந்திருந்தவன் அப்பொழுதான் தலை சாய்ந்து கீழே விழுந்தான். அவன் அடித்த சிறுநீரின் மேலேயே மயங்கி விழுந்திருந்தான். இது சிரிப்பதற்காக அல்ல. தூக்கு தண்டனைக் கைதிகளுக்கும், கொலை செய்யப்படப் போகிற போர் கைதிகளுக்கும் மட்டுமே நேரக்கூடிய கொடுமை இது. அவன் மேல் எனக்கு பரிதாபம் பிறந்தது. அவன் மன்னிக்கப் பட்டான். அவனைத் தூக்கிச் சென்றார்கள்.

தூக்கிச் செல்லப்பட்ட அவனை சிவாவும், ரமேசும் குறுகுறுவென உற்று பார்த்தார்கள். அவர்களது முகத்தை உற்றுப் பார்க்கும் பொழுது மனதிற்குள்ளாக ஏதோ திட்டம் தீட்டுகிறார்கள் என்பது மட்டும் புரிந்து விட்டது. ஆனால் எனக்குப் புரியாமல் போய்விட்டது அவர்களுக்கும் யூரின் வரும் என்பது. அவர்களால் மயக்கம்போடுவது போல் நடிக்க முடியும் என்பது. ஒருவேளை அவர்களும் மன்னிக்கப்படுவார்கள் என்பது.

அந்த வெட்கங்கெட்ட மடையர்களுக்கு வீரத்தைப்பற்றி, துணிவை பற்றி எடுத்துக் கூற வேண்டியதாய் போய்விட்டது. வெள்ளையனுக்கு அஞ்சாத வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றி அவர்களுக்குக் கூறினேன். தூக்குக் கயிற்றுக்கு முத்தமிட்ட பகத்சிங்கை பற்றி எடுத்துக் கூறினேன். 10 நிமிட உபதேசத்தில் அவர்கள் கண்களில் ஏதோ ஒருவித ஒளி வீசியது. சரியாக சொல்லத் தெரியவில்லை. எனக்கு அப்படித்தான் தோன்றியது. வெள்ளையனாக இருந்தால் என்ன இந்த வௌங்காத பால்வாண்டியாக இருந்தாலா; என்ன? எல்லாம் ஒன்றுதான் என்று கூறினேன்.

அடுத்ததாக ரமேஷ் அழைக்கப்பட்டான். அவன் தோல்களை குலுக்கி கொண்டு ஒரு வீரனைப் போல் எழுந்து சென்றான். எனக்கு ஆச்சரியமாக போய்விட்டது. வார்த்தைகளுக்கு இவ்வளவு சக்தியா என்று. ஆனால் உள்ளே சென்றவன் ஏன் அபாயச் சங்கை எடுத்து ஊதினான் என்றுதான் புரியவில்லை. அந்த பள்ளியின் ஒவ்வொரு மூலையிலும் அவனது அலறல் ஒலி பட்டு எதிரொலித்தது. சென்ற தீபாவளி அன்று அவனிடம் நான் கூறினேன். நாயில் வாலில் பட்டாசை கட்டாதே, கட்டாதே என்று. எங்கே கேட்டான் அவன். அவனுக்கு என்னை போன்று நம்பிக்கையில்லை. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும என்பதில். வாயில்லா ஜீவன்களிடம் கருணையோடு நடந்து கொள்ள வேண்டும் என்பதை இங்கில்லாமல் வேறு எங்கு கற்றுக் கொள்ளப் போகிறான் அவன்.

ரமேஷ் வெளியே வரும் பொழுது 16 வயதினிலே கமலைப் போல நடந்து வந்தான். கணுக்காலில் அடித்துவிட்டார்கள் போல. நான் சிரித்து விடக் கூடாது என்று சபதம் எடுத்துக் கொண்டது வீனாய் போய்விட்டது. ரமேஷ் இனிமேல் என் நண்பனாக இருப்பான என்று தெரியவில்லை.

அடுத்ததாக சிவா அழைக்கப்பட்டான். அவன் என்னை திரும்பி சந்தேகமாகப் பார்த்தான். அந்த கண்களில் தூரதேச கடற்பயணம் மேற்கொள்பவனின் துயரக் காட்சி தெரிந்தது. இதுவரை அடித்ததில் அந்த பிரம்பு உடைந்து போயிருந்தது. புதிதாக கொண்டுவரப்பட்ட பிரம்பில் திரு. தர்மராஜின் ஆணைப்படி விளக்கெண்ணை தடவப்பட்டுக் கொண்டிருந்தது. கறிக்கடைக்காரன் ஆட்டை வெட்டுவதற்கு முன் தனது கத்தியை கூர்தீட்டுவான். அதை அந்த ஆடு பார்த்துகொண்டிருக்கும். அதை போன்றதொரு பெரும் பேற்றை சிவா பெற்றிருந்தான். அவனது உடலெல்லாம் சில்லிட்டு போய்விட்டது. கண்களில் கண்ணீர் திரண்டு நின்றது. தர்மராஜ் என்ற கொலைவெறியனை அவன் சந்திக்க தயாரானான். சிவா தனது தந்திர திட்டத்தை மீண்டும் ஒருமுறை நியாபகப்படுத்திக் கொண்டான். அதுதான் அவனது ஒரே வழி. ஒரே தாரக மந்திரம். அது.......... கத்த வேண்டும். தொண்டை கிழிய கத்த வேண்டும் எதிரிகள் மிரண்டு போகும்வரை கத்த வேண்டும். அவ்வளவுதான் நிச்சயம் உயிர் பிழைக்க வாய்ப்புண்டு.

தமிழகததின் பாரம்பரிய கலைகளுள் ஒன்றான சிலம்பத்தில் சிறப்பான வகையில் தேர்ச்சியடைந்திருந்த திரு. தர்மராஜ், தனது மிகையான தகுதியை சிவாவிடம் நிரூபித்துக் கொண்டிருந்தார் என்று சொன்னால் அது மிகையில்லை. சிவாவும் அச்சமின்றி தனது குரல் வலிமையை உலக்குக்கு நிரூபித்துக் காட்டினான். ஹிட்லரின் வதை முகாமில் எது போன்றதொரு காட்சி அறங்கேறியிருக்கும் என்கிற கற்பனைக்கு நிஜ உருவம் கொடுத்துக் கொண்டிருந்தார் திரு. தர்மராஜ். 20 நிமிட போர் ஒத்திகையை முடித்துக் கொண்டு சத்தியமாக உயிருடன் வந்து கொண்டிருந்தான். சாத்தியமில்லை தான் இருப்பினும் அது உண்மை. அவன் தர்மராஜ் எனும் கொலை வெறியனின் தாக்குதலில் இருந்து தப்பி பிழைத்து வந்து கொண்டிருந்தான்.

அடுத்ததாக சிறப்புமிக்க நான் அழைக்கப்பட்டேன். எனக்குத் தோன்றவில்லை. எனது பழிவாங்கும் படலத்தை அவர்கள் முடுக்கிவிடுவார்கள் என்று. பதிலுக்கு பதில் என்று அது போய்க்கொண்டே இருக்கும் போல.

உள்ளே சென்றபின் தான் தெரிந்தது. அவர்கள் இருவர் அல்ல மூவர் என்பது. ரவீந்திரனும் இணைந்து கொண்டு இவ்வளவு நேரம் மும்முனைத் தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். அய்யோ நான் எவ்வளவு பெரிய தவறு செய்ய இருந்தேன். அந்த ரவீந்திரனை மன்னித்துவிடலாம் என்றல்லவா இருந்தேன்.

என் மேல் அவர்கள் மூவருமாக இணைந்து நட்த்திய தாக்குதல்களையும், அவர்கள் செய்த கொடுஞ்செயல்களையும் நான் சொல்லப் போவதில்லை. அது எனது தன் மானத்தை பாதிக்கக் கூடிய விஷயங்கள். சிறுவர்களை பொறுத்தவரை தன்மானமில்லாதவர்கள் என்று நினைப்பீர்களேயானால் நான் அதற்கு எதிரானவன். அவர்கள என்னை அடித்தார்கள். கேவலப்படுத்தினார்கள். இடையிடையே ஏதோ கேள்வி கேட்டார்கள். என்னிடம் மிகமிக அசிங்கமாக, மனிதத் தன்மையற்று நடந்து கொண்டார்கள். அநத ரவீந்தரனுக்குள் இவ்வளவு நாளாக ஒரு ஓல்டுமங்க் குடித்த கொரில்லா குரங்கு இருப்பது தெரியாமலே போய்விட்டது எனக்கு.

எனக்கு இப்பொழுது தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான ஒரு விஷயம உண்டு. அது, ஒரு ஹீரோகோண்டா பைக்கில் பிரேக் ஒயர் எங்கு இருக்கும் என்பதுதான். வாய்ப்பு கிடைத்தால் எல்லோரும் தங்கள் கொடூரத் தன்மையை காட்ட விரும்புகிறார்கள். அந்த ரவீந்திரன் மட்டும் என்ன மகாத்மாவை போலவா நடந்து கொள்ளப் போகிறார். பாடம் கற்பிப்பது என்று வந்துவிட்டால் யாராய் இருந்தால் தான் என்ன?. சிலர் தங்களது மோசமான பழக்க வழக்கங்களை மோசமாக பாதிக்கப்பட்ட பின்தான் கைவிடுவார்கள். 20, 22 வயதில் விட்டிருக்க வேண்டிய பழக்கம். வண்டியை ஸ்டார்ட் செய்தவுடன் ஆக்ஸிலேட்டரை முழுவதுமாக திருகிக் கொண்டு வேகமாக செல்லுவது என்பது இந்த 35 வயதில் அப்படி ஒன்றும் நல்ல பழக்கம் இல்லையே?. திரு. ரவீந்தரனுக்கு சில நல்ல பழக்க வழக்கங்களை சொல்லிக் கொடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. என்று நினைக்கிறேன்.

அந்த பிரேக் ஒயர் அப்படி ஒன்றும் கடினமாக இலலை. குறைந்த பட்சம் ஒரு சாக்கடையில் விழுந்து எழுவாரேயானால், அது எனக்கு போதுமானது. இதில் எனக்கொன்றும் பெரிதாக வித்தியாசம் தெரியவில்லை. ஒரு பிரம்பால் அரைக்குள் ஓடவிட்டு அடிக்க கூடிய வாய்ப்பு எனக்கும் கிடைக்குமானால், நானும் அவ்வாறே திருப்தியடைந்து கொள்வேன். அந்த பெரிய மனிதர்களைப் போல் அல்லாமல் சற்று இரக்க சிந்தனையுடனும், மன்னிக்கும் தன்மையுடனும் நடந்து கொள்வேன். சிறிது வயது முதிர்வால் செய்யும் செயலில் ஏதேனும் புனிதம் வந்து ஒட்டிக் கொள்ளுமா? நியாயம், சரி என்பதெல்லாம் எந்த வயதினரானாலும் ஒன்றாகத்தானே இருக்க வேண்டும். இந்த விஷயங்களில் ஏதேனும் புதிய இலக்கணம் வகுக்கப்பட்டிருக்கிறதா?

ஒருவித சரவாதிகாரத் தன்மையோடு நாங்கள் செய்வதுதான் சரி என்கிற தோரணையில், தங்கள் பதவி மற்றும் அதிகாரத்தில் துணையோடு, அதுவும் எதிர்த்து தாக்க துணிவோ? சக்தியோ? இல்லாத சிறுவர்களிடம் தங்களது சொந்த பழிவாங்கும் செயலை நிறைவேற்றும் அசிங்கத்தை யார்தான் கவனிக்கிறார்கள். நாங்கள் புனித மகாத்மாக்கள், நேர்மையின் சிகரங்கள், கல்வி கற்பிக்கும் உயரிய தொழிலை மேற்கொண்டிருப்பவர்கள் போன்ற சற்றும் பொருத்தமில்லாத, போலியான முகமூடிகளை போட்டுக் கொண்டு சமுதாயத்தில் தாங்கள் மிக நல்லவர்கள் என்கிற தோரணையோடு முகத்தை வைத்துக் கொண்டு வலம் வரும் இவர்களின் உண்மையான உள் கொடூரங்களைப் பற்றி யார் புரிந்து கொள்கிறார்கள். குறைந்தபட்சம் ஒரு பாதிக்கப்பட்டவனின் புலம்பல்கள் கூட வன்மையாக கண்டிக்கத்தக்க, சமுதாயத்தால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒருவித அஜீரணமான விஷயமாகவே இருக்கிறது.

சிறுவர்கள் அடங்கிவாழ கற்றுக்கொள்ள வேண்டும். மரியாதை என்கிற பதத்திற்கு இவன்தான் பொருள் என்பது போல் நடந்து கொள்ள வேண்டும். சற்றும் சகிக்க முடியாத, மற்றும் புரிந்து கொள்ளவே முடியாத இந்த கொள்கையை (விரும்பாவிட்டாலும்) ஏற்றுக் கொள்பவனாக, அதாவது ஒரு ஆசிரியர் உஙகளை அடிப்பாரேயானால் அது உங்கள் நன்மைக்கே, உங்களை வாய்க்கு வந்தபடி திட்டுவாரேயானால் அதுவும் உங்கள் நன்மைக்கே, அவரின் வன்முறைகள் எல்லாம் உங்கள் நன்மைக்கே என்கிற நவீன கொள்கை இருக்கிறதே. நான் அரசியலை வேறு எங்கு போய் கற்றுக் கொள்ள வேண்டும். இது ஒரு அழகான அரசியல் சாணக்கியத்தனம். ஒரு பிற்கால அரசியல்வாதிக்கு மிகவும் உதவக்கூடிய விஷயம். உன் வன்முறைகளுக்கும், நேர்மையற்ற தன்மைக்கும் சாயம் பூசிவிடு. ஆம் மிகச் சிறந்த வார்த்தைகள். மக்கள் ஏமாந்து விடுவார்கள். அவர்கள் வேறு எதற்குத்தான் இருக்கிறார்கள். சிறிது ஏமாற்றவாவது பயன்படுகிறார்களே. அவர்கள் ஆழ் மனதுள் இதைப் பதிய வைத்து விடலாம். அதாவது "இவையெல்லாம் உங்கள் நன்மைக்கே" எனது வன்முறைகளெல்லாம் உங்களை காப்பாற்றவே. எனது வக்கிரங்கள் எல்லாம் உங்கள் நல்வாழ்க்கைக்கே. எனது தகாத செயல்கள் எல்லாம் உங்கள் வாழ்க்கையை வளப்படுத்தவே. சாயம் பூசும் கலைதான் எவ்வளவு அழகானது. நான் முட்டாளாக்கப்படுவதை, என்னையே விரும்பி ஏற்றுக் கொள்ளச்செய்யும் அருமையான கலை. என்னை பொருத்தவரை இது வன்முறையின் உச்சம். அதுவும் சிறுவர்களிடம் இது மிக அதிகம்.

இதுவும் ஒருவித ரேக்கிங்கே. கல்லூரியில் முதலாமாண்டு மாணவனை மூன்றாமாண்டு மாணவன் தனது வன்முறை செயல்கள் மூலம் ஆக்கிரமிக்க முயலும் செயலுக்கும், ஒரு உத்தம ஆசிரியரின் இது போன்ற செயலுக்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் கல்லூரி மாணவர்கள் மட்டும் தனியாக தண்டிக்கப்படுகிறார்கள். ஆம் நானும் இவ்வாறு ஏக்கம் கொள்ள செய்யப்படுகிறேன். நானும் ஒரு ஆசிரியரைப் போல, ஒரு தலைமையாசிரியரைப் போல, எனது விருப்பப்படி, சுதந்திரமாக, எனது ஈகோவை, பூரணமாக திருப்தி செய்துகொள்வது எப்போது. நானும் எப்பொழுது ஒரு பழிவாங்கும் செயலை சுதந்திரமாக எந்த பயமுமின்றி வௌப்படையாக, அதுவும் இந்த சமுதாயத்தின் முழு ஒப்புதலோடு செய்த கொள்வது. எனக்கு இன்னும் அது போன்றதொரு தகுதி வரவில்லையோ? நானும் அதற்கு ஒரு ஆசிரியராக வேண்டுமோ?

தெளிவாக சொல்லிக் கொள்ளப்பட வேண்டிய விஷயம் இது ஒன்றுதான். எனது பழிவாங்கும் செயலில் எனக்கு எந்தவித தாழ்வு மனப்பான்மையோ? சுய காழ்ப்புணர்ச்சியோ இல்லாமல் இருக்கிறதென்றால் அதற்குரிய உளவியல் காரணங்களை வேறு எங்கும் தேட வேண்டிய அவசியம் இல்லை. அதற்கு ஒரு ஆசிரியரே போதுமானவராக இருக்கிறார். அவர் என்னை தாழ்வு மனப்பான்மை கொள்ள விடுவதில்லை. அவர் எனது காழ்ப்புணர்ச்சிகளுக்கு பதில் சொல்லிவிடுகிறார். ஆம் அவர் என்னை பழிவாங்க தூண்டும் எல்லா நியாயமான விஷயங்களுக்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார்.

- சூர்யா ljsurya@gmail.com
நன்றி கீற்று, திண்ணை